ETV Bharat / state

இயக்குநர் மாரி செல்வராஜ் என் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார் - 'பரியேறும் பெருமாள்' தங்கராஜ்

author img

By

Published : Feb 12, 2021, 10:24 AM IST

திருநெல்வேலி: 'பரியேறும் பெருமாள்' பட நடிகரும் கிராமிய கலைஞருமான தங்கராஜுக்கு அரசு உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்.

thangaraj
thangaraj

எந்த ஒரு தனி நபருக்கும் ஒரு அடையாளம் இருந்தால் மட்டுமே இந்தச் சமூகத்தால் அவர் திரும்பிப் பார்க்கப்படுவார். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி முத்திரைப் பதித்த 'பரியேறும் பெருமாள்' படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்த நெல்லை தங்கராஜ் கிராமிய கலைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் அடையாளமாக மாறினார். திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் வறுமையோடு வாழ்ந்துவருபவர்தான் இந்த நெல்லை தங்கராஜ்.

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (63). கிராமிய கலைஞரான இவர் தனது 17 வயது முதல் தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்தார். ஆணாக இருந்தாலும் தனது தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பெண்ணைப் போன்று தங்கராஜ் வேடமிட்டு பெண்களுக்கான நளினங்களுடன் ஆடி மக்களை மகிழ்வித்துவந்தார். வெறும் தெருக்கூத்து மட்டும் நடத்தினால் குடும்பத்தை கரைசேர்க்க முடியாது என்பதால் இடைப்பட்ட நேரங்களில் வெள்ளரிக்காய் வியாபாரமும் பார்த்துவந்தார்.

இந்தச் சூழலில்தான் இயக்குநர் மாரி செல்வராஜ், தங்கராஜை சந்தித்து தனது படத்தில் நிச்சயம் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் தெருக்கூத்தில் மட்டுமே தனக்கு ஆட தெரியும் சினிமா நடித்து பழக்கமில்லை எனவே என்னை விட்டுவிடுங்கள் என்று தங்கராஜ் மறுத்துள்ளார்.

இருப்பினும் விடாப்பிடியாக, நீங்கள்தான் இந்தக் கதாபாத்திரத்திற்குச் சரியாக இருக்கும் என்று கூறி தங்கராஜை திரைத் துறைக்கு மாரி செல்வராஜ் இழுத்துவந்தார். அவர் எதிர்பார்த்தபடி தங்கராஜின் கதாபாத்திரம் 'பரியேறும் பெருமாள்' படத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் பாவண்ணன் இயக்கத்தில் 'நான் பிசியாக இருக்கிறேன்' என்ற படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' என்ற படத்திலும் நடித்துவருகிறார். கோடிகள் புரளும் சினிமாவில் கால் எடுத்துவைத்தாலும் தற்போதுவரை தங்கராஜின் வறுமை மாறவில்லை.

thangaraj
நடிகர் தங்கராஜ்

வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் ஒன்றரை சென்ட் இடத்தில் தங்கராஜ் தனது மனைவி பேச்சு கனி, மகளுடன் வீடு கட்டி வசித்துவந்தார். திடீரென சில நாள்களுக்கு முன்பு தங்கராஜின் வீடு இடிந்து விழுந்ததால் துன்பத்தில் ஆழ்ந்தார். பின்னர் மனம் தளராமல் தனது வீட்டுக்கு எதிரே தற்போது ஓலைக் குடில் அமைத்து அதற்கு மேல் தார்ப்பாய் விரித்து தனது மனைவியுடன் வசித்துவருகிறார்.

கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் தனது மகளை மட்டும் உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளார். தற்போது தங்கராஜ் தனது மனைவியுடன் அந்தக் குடிசை வீட்டில் மின் இணைப்பு இல்லாமல் இருளில் வசித்துவருகிறார். 'பரியேறும் பெருமாள்' படத்தில் ரூ.12 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். இதனால் திரை வாழ்க்கை அவருக்குப் புகழைத் தேடித் தந்திருந்தாலும்கூட செல்வத்தைத் தேடி கொடுக்கவில்லை என்றே கூறலாம்.

இந்தச் சூழலில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த நாறும்பூநாதன் சமீபத்தில் தங்கராஜை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்குச் சென்றார். அப்போது கணவன், மனைவி இருவரும் வாழ்வதற்குத் தகுதியில்லாத குடிசையில் வசித்துவருவதைப் பார்த்து கண்கலங்கியுள்ளார்.

இதையடுத்து எழுத்தாளர் நாறும்பூநாதன் தங்கராஜ் நிலைமையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தங்கராஜ் குடும்பத்தை நேரில் அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

மேலும் எழுத்தாளர்கள் சார்பில் வழங்கிய ரூ.70 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தங்கராஜிடம் வழங்கினார். மேலும், தங்கராஜுக்கு அரசு சார்பில் வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்துள்ளதுடன் கல்லூரி படிப்பை முடித்துள்ள தங்கராஜின் மகளுக்கு அரசுத் துறையில் தற்காலிக வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் தங்கராஜுடன் சந்திப்பு

இது குறித்து தெருக்கூத்து கலைஞர் தங்கராஜிடம் கேட்டபோது, "எனது 17 வயதில் தெருக்கூத்து கற்றுக்கொண்டேன். கோயில் நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெருக்கூத்து நடத்துவோம்.

நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் எனது மனைவியின் உடல் நலத்திற்கும் மகளின் படிப்பிற்கும் செலவழித்தேன். 53 வயதில் தெருக்கூத்து ஆடுவதை நிறுத்திவிட்டு முழுவதும் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்துவருகிறேன்.

இயக்குநர் மாரி செல்வராஜ் என் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார். அவர் உதவியால் தற்போது உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளேன். எனது இந்த வறுமை நிலையை அறிந்து எழுத்தாளர் நாறும்பூநாதன் மாவட்ட ஆட்சியர் மூலம் எனக்கு உதவி செய்துள்ளார். தற்போது மாவட்ட ஆட்சியர் எனக்கு வீடு கட்டித் தருவதாகவும் எனது மகளுக்கு அரசுத் துறையில் தற்காலிக பணி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்" என்று கூறினார்.

தங்கராஜ் போன்று மாவட்டத்தில் பல்வேறு கிராமியக் கலைஞர்கள் கடும் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே அவர்களின் வாழ்விலும் ஒளி ஏற்றும் வகையில் அரசு உதவி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

thangaraj
மாவட்ட ஆட்சியர் விஷ்னு

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர், "எழுத்தாளர்கள் திரட்டிய நிதியை என்னிடம் கொடுத்து தங்கராஜிடம் வழங்க சொன்னார்கள். தங்கராஜின் மகளுக்கு தற்காலிக பணி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் அவருக்கு வீடுகட்டி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வழங்கவா எனக் கேட்டோம். அதற்கு அவர் தற்போது வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டித் தர வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த இடத்தில் சில ஆவண பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொடுத்தால் நிச்சயம் அவர் வசிக்கும் இடத்திலேயே புதிதாக அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பரியேறும் பெருமாள் இனி மானுட சமூகத்தின் பிரதி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.