தூத்துக்குடி: மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சுமார் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் தொல்லியல் எச்சங்கள் கிடைத்ததன் அடிப்படையில், இங்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் தனி தனியாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு சார்பில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் அகழ்வாராட்சியில், தங்கப்பட்டை, முதுமக்கள் தாழி, எலும்புக்கூடுகள் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை காட்சிப்படுத்த ஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் இன்று (ஆக.05) தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக கட்டுமானப் பணியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தொல்லியல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு 2ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க பிரதமர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்தந்த நாடுகளைச் சேர்ந்த தலைவர்களிடம் இது குறித்து பேசி வருகிறார்.
மணிப்பூர் விவகாரத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் ஒரு பொதுவான பாதை வேண்டும் என எதிர்க்கட்சிணர் கேட்டுக் கொண்டனர். மணிப்பூரில் நடக்கும் கலவரம் முதல் முறையாக நடப்பது அல்ல, கடந்த 2013 ஆம் ஆண்டு இதேபோன்று மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டது. அப்போது அங்கு கிராமங்களுக்கு மருந்து பொருள்கள் கூட கிடைக்கவில்லை அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அங்கு செல்லவில்லை.
ஆனால், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள்கள் அங்கு தங்கி, மணிப்பூரின் நிலை குறித்து ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் அங்கு நடப்பது என்னவென்று பேசுவதற்கு உள்துறை அமைச்சர் தயாராக இருக்கிறார். ஆனால் அவர்கள் அதைக் கேட்காமல் பிரதமர் தான் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களும் (எதிர்கட்சியினர்) அங்கே சென்று பார்த்தார்கள் அதையாவது கூறுங்கள் என்றால் அதையும் பேச மறுக்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை.. முறைகேடு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!