ETV Bharat / state

நெல்லை அருகே கொலையில் முடிந்த தீபாவளி மது விருந்து.. நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 10:17 PM IST

Updated : Nov 13, 2023, 10:49 PM IST

கன்னியாகுமரியில் கட்டிட தொழிலாளி வெட்டி கொலை
கன்னியாகுமரியில் கட்டிட தொழிலாளி வெட்டி கொலை

நெல்லை தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி மது விருந்தின் போது கட்டிட தொழிலாளிகளுக்குள் ஏற்பட்ட தகராறில், ஜூலியஸ் என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். மேலும் தப்பி ஓடிய சக தொழிலாளர்கள் 2 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள், நெல்லை மாவட்டம் மேலத் திடீயூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தங்கி இருந்தபடி கட்டிடப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் இவர்கள் தங்கி வேலை செய்து வந்த நிலையில், நேற்று(நவ.12) தீபாவளி பண்டிகை என்பதால் தொழிலாளர்கள் மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த ஜூலியஸ் குமார்(42) என்பவரை சக தொழிலாளர்கள் அரிவாளால் முகம், கழுத்து, கை, கால் ஆகிய பகுதிகளில் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து இன்று(நவ.13) காலை ஜூலியஸ் குமார் சடலமாக கிடப்பதை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டு முன்னீர்பள்ளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ஜூலியஸின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சக கட்டிடத் தொழிலாளர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில், ஜூலியஸ் குமார் மற்றும் அவருமன் என்று கல்லூரியில் பணி புரிந்த இரண்டு தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று(நவ.12) மது விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். இதில் இவர்களுடன் வேலை பார்க்கும் மற்ற 1 தொழிலாளரும் இணைந்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தி கொண்டிருந்தபோது, ஜூலியஸ் குமார் மது போதையில் மற்ற இரண்டு தொழிலாளர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஜூலியஸ் குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்தவர்களின் சொந்த ஊர் நாகர்கோவில் என்பதால் காவல் துறையினர் அவர்களை தேடி நாகர்கோவில் சென்றுள்ளனர். நெல்லையில் தீபாவளி அன்று மது விருந்தின் போது கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!

Last Updated :Nov 13, 2023, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.