ETV Bharat / state

Audio Leak - 'இந்தியன் தாத்தா போல் பேசினால் எதுவும் நடக்காது' - இலவச வீட்டு மனைக்கு லஞ்சம் கேட்ட அரசு அலுவலர்!

author img

By

Published : Apr 25, 2022, 9:36 PM IST

லஞ்சம் கேட்ட அரசு அலுவலர்
லஞ்சம் கேட்ட அரசு அலுவலர்

திருநெல்வேலியில் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த பெண்ணிடம் லஞ்சம் கொடுக்கும்படி அறிவுறுத்திய வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி: ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட லெவஞ்சிபுரம் அடுத்த ராஜகிருஷ்ணபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர் ராணி. இவர் வாடகை வீட்டில் வசித்து வருவதால் இலவச வீட்டு மனை கேட்டு இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மனை வழங்காமல் அலுவலர்கள் இழுத்தடித்ததால் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் செய்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகன் என்பவர் ராணியின் மகள் சிவரஞ்சனியைத்தொடர்பு கொண்டு, இலவச பட்டா வேண்டுமென்றால் ’வருவாய் ஆய்வாளர் (ஆர்ஐ) மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு (விஏஓ) 10ஆயிரம் முதல் 15ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு வேலையும் நடக்காது’ என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

மேலும், ’ஆர்ஐ மற்றும் விஏஓ நேரடியாக உங்களிடம் பணம் கேட்க மாட்டார்கள். அதற்கென சில ஏஜென்டுகள் இருப்பார்கள். அவர்களைப் பிடித்து பணம் கொடுத்து சரி செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

அதற்கு சிவரஞ்சினி அவ்வளவு பணம் கொடுப்பதற்கு பதில் நாங்களே அந்த பணத்தை வைத்து நிலம் வாங்கிக் கொள்ளலாமே என்று கேட்டபோது, ’இப்போது ஆட்சியில் கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் 2 ஆயிரம் ரூபாய் தான் வாங்கினார்கள். ஆனால், தற்போது கண்டிப்பாக 15ஆயிரம் கொடுக்க வேண்டும்.

பியூன் முதல் கிளர்க் வரை அனைவரும் லஞ்சம் வாங்குவார்கள். பணம் கொடுக்காமல் ஒரு வேலையும் நடக்காது. நீங்கள் இந்தியன் படத்தில் வரும் கமல்ஹாசன் போல் தன்னாலே நடக்கும் என்று பேசினால் எதுவும் நடக்காது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுங்கள். அதன் பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். முருகன் செல்போனில் பேசிய உரையாடலை சிவரஞ்சனி, தனது அலைப்பேசியில் பதிவு செய்து வைத்துள்ளார்.

அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இலவச வீட்டு மனை வழங்க அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாகவும் தனக்கு உடனடியாக இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று கூறி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணி இன்று (ஏப்.25) மனு அளித்தார்.

இதுகுறித்து ராணியின் மகள் சிவரஞ்சனி கூறும்போது, “எங்கள் பகுதியில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் பலருக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இலவச வீடு கொடுத்துள்ளனர்.

லஞ்சம் கேட்ட அரசு அலுவலர்

ஆனால், நாங்கள் இதுவரை வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். எனது தந்தையும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் வருமானம் இல்லை. எனவே இலவச வீட்டுமனை கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் ஆர்ஐ, விஏஓவுக்கு லஞ்சம் கொடுக்கும்படி கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.