ETV Bharat / state

இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த மருமகள் கொலை.. நெல்லை பகீர் சம்பவம்!

author img

By

Published : Apr 9, 2023, 1:12 PM IST

நெல்லையில் இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த மருமகளை, மாமனார் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2வது திருமணத்திற்கு தடையாக இருந்த மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மாமனார்
2வது திருமணத்திற்கு தடையாக இருந்த மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மாமனார்

திருநெல்வேலி: நெல்லை அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). இவருடைய மகன் தமிழரசன். தமிழரசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (வயது 28). தங்கராஜ் மனைவி இறந்து விட்டதால் திடீரென இரண்டாவது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும் மனைவி இறந்து விட்டதால் தங்கராஜ் தனது வீட்டை மகன் தமிழரசன் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

அதே சமயம் திடீரென மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே தங்கராஜ், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியோடு அந்த வீட்டில் யாருடைய இடையூறும் இல்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எண்ணியுள்ளார். இதனால் தனது மகனிடம் வீட்டைத் தனது பெயரில் எழுதித் தருமாறு அவ்வப்போது தொலைப்பேசியில் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். அப்போது மகனிடம் வீட்டைக் கேட்டு தங்கராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் இதற்குத் தமிழரசன் மறுத்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் தமிழரசன் மற்றும் மருமகள் முத்துமாரி ஆகியோர் சேர்ந்து தங்கராஜை இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று கண்டித்து உள்ளனர். இதனால் தங்கராஜ் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தமிழரசன் அருகில் உள்ள கடைக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த தங்கராஜ், இரும்பு கம்பியை எடுத்து தனது மருமகள் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்துள்ளனர். அவர்களைக் கண்டதும் தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

எனவே அக்கம்பக்கத்தினர் இது குறித்து அருகிலுள்ள முன்னீர் பள்ளம் காவல் நிலையம் மற்றும் 108க்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த முன்னீர் பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துமாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த முத்துமாரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மருமகளை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மாமனாரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை அறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மருத்துவமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ’’கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்வதே போலீசாரின் முதல் பணியாகும். அதன்படி இந்த வழக்கிலும் தங்கராஜைக் கைது செய்யத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

எனினும் முத்துமாரியின் உறவினர்களுக்கு இதில் உடன்பாடு ஏற்படாததால் பிணவறையில் உள்ள முத்துமாரி உடலை வாங்க மறுத்துத் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ஏற்கனவே இச்சம்பவம் குறித்து முன்னீர் பள்ளம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது அதைக் கொலை வழக்காக மாற்றம் செய்து தங்கராஜைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பணத்துக்காக பெரியப்பாவை கொலை செய்தவர் கைது - போலீஸ் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.