ETV Bharat / state

நெல்லை கல்குவாரி விபத்து எதிரொலி - 55 குவாரிகளை ஆய்வு செய்ய ஆறு சிறப்புக் குழுக்கள்!

author img

By

Published : May 23, 2022, 8:00 PM IST

நெல்லை கல்குவாரி விபத்து எதிரொலி - 55 குவாரிகளை ஆய்வு செய்ய ஆறு சிறப்பு குழுக்கள்!
நெல்லை கல்குவாரி விபத்து எதிரொலி - 55 குவாரிகளை ஆய்வு செய்ய ஆறு சிறப்பு குழுக்கள்!

நெல்லை அடைமிதிப்பான்குளத்தில் நிகழ்ந்த கல்குவாரி விபத்தின் காரணமாக, நெல்லையில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்தன. அதில், அந்த நேரத்தில் பணியில் இருந்த ஆறு ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமான மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இறுதியாக இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் சிக்கிய ஆறாவது நபர் நேற்று இரவு மீட்கப்பட்டதுடன் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றன. இந்நிலையில், இன்று காலை குவாரி பகுதியை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர், “அடைமிதிப்பான்குளம் தனியார் குவாரியில் நடந்த நிலச்சரிவு விபத்தில் 8 நாட்கள் மீட்புப்பணி நடத்தப்பட்டு, 6 நபர்கள் மீட்கபட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த 5 மணி நேரத்தில் இந்திய கடற்படை தளம் ராமேஸ்வரத்திலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.

சிறப்புக்குழு: மேலும் கூடங்குளம், எல்.என்.டி ஆகிய இடங்களில் இருந்தும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. இந்த விபத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புக்குழுவில் பிற மாவட்ட அலுவலர்கள் இடம்பெறுவார்கள்.

குழுவின் தலைவராக மாவட்ட வருவாய் அலுவலர் இடம் பெறுவார். துணை ஆட்சியர் அந்தஸ்தில் அலுவலர்கள், வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் காவல் துறையினரும் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள். இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், போர்க்கால அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படும். உயிரிழந்தவர்களின் உடலை வாங்குவது தொடர்பாக, அலுவலர்கள் ஒவ்வொரு குடும்பத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம், தகுதியான அரசின் திட்டங்கள் ஏதும் இருந்தால் அவர்களுக்கு அதனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை கல்குவாரி விபத்து எதிரொலி - 55 குவாரிகளை ஆய்வு செய்ய ஆறு சிறப்புக் குழுக்கள்!

விபத்து நடந்த குவாரியைப் பொறுத்தவரை ஏற்கெனவே உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த விபத்து குறித்து குழுவினுடைய ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், தேசியப் பேரிடர் மீட்புக்குழு உதவி கமாண்டர் சுதார் உள்பட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்களும் இருந்தனர்.

இதையும் படிங்க: நெல்லை குவாரி விபத்தில் சிக்கியிருந்த கடைசி நபரும் சடலமாக மீட்பு; பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.