ETV Bharat / state

நெல்லையை மிரட்டும் கனமழை.. வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் மாநகரம்.. அத்தியாவசிய பொருட்கள் மதுரையிலிருந்து வரவழைக்க ஏற்பாடு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 10:25 AM IST

Updated : Dec 18, 2023, 4:49 PM IST

Continuous Rain in Tirunelveli: நெல்லையில் 30 மணி நேரமாக இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை மதுரையிலிருந்து வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

people suffer due to continuous rain in tirunelveli
திருநெல்வேலியில் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் அவதி

திருநெல்வேலியில் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் அவதி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவு காலை முதல் உள்ளது.

நெல்லை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்டோர் இணைந்து பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் சராசரியாக 28 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 45 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதலாகத் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அணையில் கூடுதல் தண்ணீர் திறந்தால், மிக வேகமாக ஆற்றில் தண்ணீர் வரும் என்பதால், கரையோர மக்களை வெளியேற்றத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்க, தயார் நிலையில் பேரிடர் மையம் செயல்பட்டு வருகிறது. ஆயிரத்து 200 பேர் தற்போது வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 100க்கும் மேற்பட்ட ஜேசிபி எந்திரங்கள் மழை பாதிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் நிலவரம் கட்டுக்குள் உள்ளது. கரையோர மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரையோர மக்கள் தானாக முன்வந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல, மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இடர்பாடுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளதன் அடிப்படையில், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாமிரபரணி ஆற்றில், மற்ற பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரும் சேர்ந்து 60 ஆயிரம் கன அடி வரை செல்ல வாய்ப்புள்ளது. நெல்லையில் 123 மின்மாற்றிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக அணைத்து வைக்கப்பட்டுள்ளன. மூலக்கரைப்பட்டி பகுதியில் அதிக கன மழை பெய்துள்ள சூழலில், அங்குள்ள துணை மின் நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து பெண்கள் குழந்தைகள் வெளியேறிய நிலையிலும், ஆண்கள் வெளியேற மறுக்கிறார்கள். அவர்களையும் வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு பச்சையாறு, கொடுமுடி ஆறு, நம்பியார் உள்ளிட்ட அணைகளில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் ஆவின் நிர்வாகம் மூலம் 33 ஆயிரம் லிட்டர் பால் நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் நிலையில், கூடுதலாக இரண்டு டேங்கர்களில் பால் மதுரையில் இருந்து கொண்டுவரப்படுகிறது. இரண்டு டன் பால் பவுடரும் நெல்லை மாவட்டத்திற்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதான சாலைகளில் மட்டும் பஸ் போக்குவரத்து தற்போது நடந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இதற்கிடையில், நேற்று இரவு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி நேற்றிரவு நெல்லை மாவட்டம் முழுவதும் மீண்டும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக மூலைக்கரைப்பட்டி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மிக மிக கனமழை கொட்டித் தீர்த்தது.

அதேபோல், மாநகர பகுதிகளிலும் தொடர்ந்து இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால், எங்கு பார்த்தாலும் மழை வெள்ள பாதிப்புகளாகவே காட்சியளிக்கிறது. குறிப்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர்ச் செல்வதால், ஆட்சியர் அலுவலகத்திற்குள் தண்ணீர் செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொக்கரக்குளம் பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களிம் பாதுகாப்பிற்காக, இரவோடு இரவாக மாவட்ட நிர்வாகம் மூலம் அழைப்பு வரப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டவுன் பழைய பேட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் என மாநகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்து இருப்பதால், மக்கள் கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்களை வைத்துக்கொண்டு பெரும் சிரமத்தோடு பரிதவித்து வருகின்றனர். தொடர்ந்து மழை இடைவிடாமல் பெய்து கொண்டே இருப்பதால், தண்ணீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நெல்லையில் மேலும் மழை வெள்ள பாதிப்பு அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை மிரட்டி வருகிறது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு, போன்ற அணைகளுக்கு வரும் நீர்வரத்து பல மடங்கு அதிகரிக்கிறது. இன்று (டிச.18) அதிகாலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 60 செ.மீ அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்துள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு போன்ற அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 42 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால், மணிமுத்தாறு அணை நேற்று ஒரே நாளில் 24 அடி அளவுக்கு தண்ணீர் மட்டும் அதிகரித்துள்ளது.

அதேபோல் கொடுமுடி ஆறு, நம்பி ஆறு, வடக்கு பச்சையாறு போன்ற மாவட்டத்தின் அனைத்து அணைகளிலும் தண்ணீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை மிரட்டி வருவதால், மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரும் கனமழை நெல்லையில் பெய்து வருவதாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்காசியில் கொட்டும் கனமழை... பேரிடர் மீட்புப் படை விரைவு - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தகவல்

Last Updated : Dec 18, 2023, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.