ETV Bharat / state

16 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை மாநகராட்சியைக் கைப்பற்றியது திமுக

author img

By

Published : Feb 22, 2022, 6:10 PM IST

urban local election urban local election 2022 dmk won in thirunelveli urban local election results dmk candiate won thirunelveli corporation நகர்புற உள்ளாட்சி தேர்தல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திருநெல்வேலியில் திமுக வெற்றி
நகர்புற உள்ளாட்சி தேர்தல்

திருநெல்வேலியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சியை, திமுக கைப்பற்றியதால், மேளதாளங்களுடன் திமுகவினர் கொண்டாடிவருகின்றனர்.

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று (பிப்ரவரி 22) அறிவிக்கப்பட்டுவருகின்றன. இதில் பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சியான திமுக, அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாநகராட்சியை 16 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியுள்ளது.

இதுவரை ஐந்து முறை மேயர் தேர்தல் நடைபெற்றதில், இரண்டு முறை திமுகவும், மூன்று முறை அதிமுகவும் வெற்றிபெற்றிருந்தன. தற்போது ஆறாவது முறையாக நடைபெற்ற தேர்தல் முடிவில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

அதாவது திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில், இதுவரை 48 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவுபெற்றுள்ளது. இதில் திமுக கூட்டணி 43 இடங்களிலும், அதிமுக வெறும் நான்கு இடங்களில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவி திமுக வசம் செல்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

அதேபோல் திருநெல்வேலியில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய மூன்று நகராட்சிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் ஆகிய இரண்டு நகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட களக்காடு நகராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களைக் கைப்பற்றி இருப்பதால், அந்த நகராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் அங்கு இரண்டாவது இடத்தில் திமுக பத்து வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளதால் சுயேச்சைகள் ஆதரவுடன் திமுகவே களக்காடு நகராட்சியையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நெல்லையில் 17 பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்ற நிலையில், 12 பேரூராட்சிகளில் திமுக பெரும்பான்மை இடங்களைப் பிடித்துள்ளது. அதிமுக ஒரே ஒரு பேரூராட்சியை மட்டும் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள நான்கு பேரூராட்சிகளில் திமுக குறைவான இடங்களைப் பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நகராட்சிகள், பேரூராட்சிகளில் முழுமையாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மாநகராட்சிக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு திருநெல்வேலி மாநகராட்சியைக் கைப்பற்றி உள்ளதால் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரியிலும் திமுகதான் ராசா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.