ETV Bharat / state

நாங்குநேரி சம்பவத்திற்கு இதுவே காரணம் - பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேட்டி...

author img

By

Published : Aug 20, 2023, 5:56 PM IST

Annamalai speaks about Nanguneri incident: தமிழகத்தில் சாதியை முன்னிலைப்படுத்தி வெளியாகும் திரைப்படங்கள் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று பாளையங்கோட்டையில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

Annamalai byte
Annamalai byte

Annamalai byte

திருநெல்வேலி: தென் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததே நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம். தென் தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி பெரிய நிறுவனங்களை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் அமைந்திருக்கும் அவருடைய மணி மண்டபத்தில் அமைந்துள்ள திரு உருவ சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது: விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன். 1857ஆம் ஆண்டு் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக கூறுகிறார்கள். ஆனால், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வீரம் விளைந்த இந்த நெல்லை மண்ணில் ஏராளமானோர் இந்திய சுதந்திரத்திற்காக போராடி இருக்கிறார்கள். அதை இளைய தலைமுறை இடையே கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை என்றார்.

கன்னியாகுமரியில் திமுக குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறு பரப்பியதாக உங்கள் மீது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் புகார் அளித்து உள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, அரசியலைப் பொறுத்தவரை நாங்கள் திமுகவின் பொய்யை தோலுரித்துக் காட்டுவதை அவதூறு பரப்புவதாக திமுகவினர் கூறுகிறார்கள். என்ன அவதூறு பரப்பினேன்? யார் குறித்து அவதூறு பரப்பினேன் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். நான் பேசியது அவதூறு என்றால், ராமநாதபுரம் மாநாட்டில் பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது அவதூறு இல்லையா? நாடாளுமன்ற திறப்பு விழாவில், செங்கோலுக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜை முதலில் கைது செய்யப்பட வேண்டும். திமுகவின் அவதூறு வழக்குகளை கண்டு பயப்படப் போவதில்லை. யார் மரியாதையாக பேசுகிறார்கள், யார் மரியாதைக்குறைவாக பேசுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அரசியலில் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவன் நான். சில நேரங்களில் திமுகவிற்கு அவர்கள் பாணியிலேயே நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டி உள்ளது.

நாங்குநேரி சம்பவத்திற்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாததே காரணம். தென் தமிழகத்தில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து முடித்துவிட்டு தென் தமிழகத்தில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளித்து பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். அப்போது தான் சாதி, கந்துவட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு வரும்.

தமிழகத்தில் சாதியை முன்னிலைப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 28 மாதங்களாக எதையும் செய்யாத முதலமைச்சர் தேர்தல் பயம் காரணமாகவே மீனவர் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளை நடத்தி வருகிறார். மீனவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அரசு நிகழ்ச்சி என்ற பெயரில் அரசியல் மாநாட்டை முதல்வர் நடத்தி வருகிறார் என தெரிவித்தார்.

இந்த நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தொடர்ந்து மருத்துவர்களிடம் செய்யப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வுகளில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு கோலாகலமாக துவக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.