ETV Bharat / state

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு கோலாகலமாக துவக்கம்!

author img

By

Published : Aug 20, 2023, 2:33 PM IST

ADMK Madurai Manadu: மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி துவக்கி வைத்தார்.

Madurai AIADMK Manadu
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு கோலாகலமாகத் துவக்கம்

மதுரை: தமிழ்நாட்டில் கடந்த 50 வருடமாகவே திமுக, அதிமுக என்ற 2 முக்கிய கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சியை கைப்பற்றி வருகிறது. இந்தநிலையில் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த அதிமுக ஆட்சி ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் உடைந்தது. அதனையடுத்து தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், வரும் தேர்தலை முன்னிட்டு தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்த வேண்டும் என முடிவு செய்தார். இதற்கு முன்பும் அதிமுக எழுச்சி மாநாடு நடந்துள்ளது. ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்றால், இதுவரை ஆளுங்கட்சியாக இருந்த போது மட்டுமே நடந்துள்ளது.

தற்போது தான் முதல் முறையாக எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இது வெற்றி காணுமா என பல நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் பல சர்ச்சைகளை கிளப்பி வந்தது. அதைத் தொடர்ந்து இன்று (ஆக.20) மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு தடபுடல் ஏற்பாடுகளுடன், கோலாகலமாக துவங்கப்பட்டுள்ளது எனலாம்.

வலையங்குளம் அருகே அதிமுகவின் 'வீர வரலாற்றின் பொன்விழா மாநாடு' இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், அக்கட்சியின் நிர்வாகிகளும் வருகை தந்துள்ளனர். தற்போது மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட 51 அடி உயர அதிமுக கொடி மரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 8.30 மணியளவில் கொடியேற்றினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் காலத்திலேயே அதிமுக கொடியில் தாமரை சின்னம்! மதுரை மாநாடு அதிமுகவுக்கு திருப்புமுனை தருமா?

அப்போது ஹெலிகாப்டர் மூலமாக வண்ணப் பூக்கள் தூவப்பட்டன. மேலும் பகல் முழுவதும் பல்வேறு தலைப்பில் கருத்தரங்குகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தொண்டர்கள் அனைவருக்கும் 3 வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனி கழிப்பறைகளும், குடிதண்ணீர் தொட்டிகளும் போதுமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை 4 மணியளவில் மாநாட்டு பொதுக்கூட்டம் தொடங்குகிறது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தம்பிதுரை, முனுசாமி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் உரையாற்றுகின்றனர். விழாவில் நிறைவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ADMK Ezuchi Manadu : 51 அடி உயர கம்பத்தில் பறக்கும் அதிமுக கொடி! ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.