ETV Bharat / state

பல் பிடுங்கிய விவகாரம்: கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சிபிசிஐடி அதிரடி விசாரணை!

author img

By

Published : Apr 22, 2023, 11:43 AM IST

Etv Bharat
Etv Bharat

விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அதிரடி விசாரணை நடத்தினர்.

நெல்லை: அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசால் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாராணை நடத்தப்பட்டு வருகிறது.

பல் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி போலீசார் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அதிரடி விசாரணை!!

இந்த விசாரணையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்பவர் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் சிசிடிவி கேமராவை உடைத்த வழக்கில் தன்னுடைய பல்லை பல்வீர் சிங் பிடுங்கியதாகவும், பின்னர் போலீசார் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து மிரட்டி பிறழ்சாட்சியாக மாறச் சொன்னதாகவும் கூறினார்.

மேலும் இந்த பல் பிடுங்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சந்தோஷ் மற்றும் அருண்குமார் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வீர் சிங் மீது கொலை மிரட்டல், கையால் காயப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இதனை தொடர்ந்து தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலக ராணி நியமிக்கப்பட்டு வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜகுமார் நவராஜ், இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சீனியம்மாள் தலைமையிலான தடயவியல் துறையினர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஆய்வாளர் அறை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போட்டோ மற்றும் வீடியோ மூலமாகவும் வழக்கு தொடர்பான தகவல்களை அவர்கள் சேகரித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரத்தில் தடயங்கள் அழிக்கப்படுகிறது - வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.