ETV Bharat / state

5ஆம் ஜார்ஜ் நினைவு விளக்குத்தூண் நெல்லையில் கண்டுபிடிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 8:53 AM IST

Tirunelveli
5ம் ஜார்ஜ் நினைவு விளக்குத்தூண் கண்டுபிடிப்பு

நெல்லை மாவட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டு விழா நினைவு விளக்குத்தூண் கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூகரெங்கபுரம் எனும் ஊரில் 5ஆம் ஜார்ஜ் மற்றும் அவரின் மனைவி மேரி பட்டாபிஷேக நினைவு விளக்குத்தூண் கல்வெட்டுகள் 2 கண்டுபிடிக்கப்பட்டதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் கூறியதாவது, "சமூகரெங்கபுரம் ஒரு பழமையான ஊர் ஆகும். இவ்வூரின் மேற்குப் பகுதியில் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்புப் பகுதியில் நான்கு தூண்கள் அமைந்து காணப்படுகின்றன. அம்முகப்புத் தூண்களில் தெற்கு பகுதியிலிருந்து 2 ஆவது தூணில் ஒரு பெண் அகல்விளக்கு ஏந்தியபடி வடக்கு பார்த்த வண்ணம் நிற்கும் சிலை காணப்படுகிறது.

அச்சிலையின் கீழ் "மூலை வீடு சுப்பா ரெட்டியார் ஸ்திரி சின்னம்மாள்" என்ற குறிப்பு காணப்படுகிறது. மூன்றாவது தூணில் முறுக்கு மீசையுடன் கூடிய ஒரு ஆண் கை கூப்பி வணங்கும் நிலையில் ஒரு சிலை அமைந்து காணப்படுகிறது. அதன் கீழ் குறிப்பு எதுவும் காணப்படவில்லை. ஒரு வேளை அச்சிலை சுப்பா ரெட்டியாராக இருக்கலாம். கோயில் முகப்பின் வெளிப்பகுதி தூண்களில் 5 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அது போல கோயில் முகப்பின் உள்பகுதியில் இரண்டு தூண்கள் அமைந்துள்ளன. அதில் 2 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

கோயில் முகப்புத்தூண் அமைப்பு உபயச் செய்தி: கோயிலின் வெளி மற்றும் உள் முகப்புப் பகுதி தூண் கல்வெட்டுகள், 1911 ஆம் ஆண்டு ஆனி மாதம் எழுதப்பட்டுள்ளன. அதில் திருவனந்தபுரம் ஸ்ரீ கிருஷ்ணசாமி ரெட்டியார், மூலை வீடு சின்னம்மாள், ரெங்கநாத சுவாமி நெய் கம்பெனியார், அன்ன விஜய ரெங்க ரெட்டியார் மனைவி ஆவுடையம்மாள் ஆகியோர் கோயில் முகப்பு பகுதியை கல்தூண்கள் மற்றும் சிலைகளுடன் கட்டிக் கொடுத்த செய்திகள் கூறப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் பேரரசர் 5ம் ஜார்ஜ் முடிசூட்டு விழா செய்தி: இக்கோயிலின் முன்பகுதியில் ஒரு விளக்குத்தூண் காணப்படுகிறது. அதில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அக்கல்வெட்டு 1911 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் சக்கரவர்த்தியாகிய ஐந்தாம் ஜார்ஜ், அவரின் மனைவி மேரியும் அரசுப் பொறுப்பேற்று முடிசூட்டிக் கொண்ட செய்தி கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனை நினைவு கூரும் வகையில் கே.ரெங்கஸ்வாமி ரெட்டியார் கோயிலின் முன் விளக்குத்தூண் ஒன்று அமைத்ததாகவும் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.

இவ்வூரின் கிழக்குப் பகுதியில் 'கோட்டை' என்ற பகுதி காணப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லால் கட்டப்பட்ட பல வீடுகள் சிதைந்த நிலைகளில் காணப்படுகின்றன. முன்பு அப்பகுதியில் கோட்டை என்று மக்கள் கூறும் வகையில் பெரிய மதில் சுவர் எழுப்பி அதற்குள் பண்ணையார் எனும் ரெட்டியார் குடும்பம் வாழ்ந்து வந்துள்ளனர். பண்ணையாரின் கோட்டை பகுதிக்குள் வேறு குடிக்குழுவினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் கோட்டை படி வாசல் பகுதி என்று ஒரு பகுதி இருந்துள்ளது. அப்பகுதியில் சிறு மண்டபம் கல்கட்டடமாக இருந்துள்ளது. அங்கு அமர்ந்து தான், பண்ணையார் ஊர் பஞ்சாயத்துகளைத் தீர்த்து வைப்பாராம். அக்கட்டடம் இன்று சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. முன்பு பஞ்சாயத்து நடைபெறும் அந்த கட்டடத்திற்கு முன் பகுதியில் ஒரு பெரிய கல்லால் செய்யப்பட்ட விளக்குத்தூண் உள்ளது. அதிலும் ஒரு கல்வெட்டு செய்தி காணப்படுகிறது.

அதில் முதல் பகுதி ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. பின்பு அதே செய்தி தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. அதில் ஐந்தாம் ஜார்ஜ் மகாராஜாவிற்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டமையினை நினைவு கூறும் வகையில், 1911 ஆம் வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் தேதி அந்த விளக்குத்தூண் பண்ணையாரின் கோட்டை மதில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட குறிப்பு காணப்படுகிறது. மேலும் இந்த விளக்குத்தூணை அப்பொழுது கிராம முன்சீப்பாக இருந்த வெங்கடாசல ரெட்டியார் (கோட்டை பண்ணையார்) நிறுவியதாகவும் கல்வெட்டு செய்தி கூறுகிறது.

பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் அரசராக பதவி ஏற்றதை சமூகரெங்கபுரம் பகுதியில் வசித்த ரெட்டியார்கள் ஆதரித்து போற்றியமையினை 2 கல்வெட்டு செய்திகளும் தெளிவுபடுத்துகின்றன. இங்கு இருந்த வேறு ஒரு கல்வெட்டு மண்ணிற்குள் புதைந்து கிடப்பதாக அருகில் வசிக்கும் மக்கள் குறிப்பிடுகின்றனர். அதை தோண்டி எடுத்து ஆய்வு செய்தால் புதிய வரலாற்றுச் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்று தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "உடலுறுப்பு தானம் செய்து கடவுளாக மாறுவோம்" - வேலூர் விழாவில் ஆந்திர அமைச்சர் ரோஜா பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.