ETV Bharat / state

வெளிநாட்டு வேலை மோகத்தால் மோசடி கும்பலிடம் சிக்கிய மகனை மீட்க தாய் கோரிக்கை

author img

By

Published : Aug 9, 2022, 6:28 AM IST

Updated : Aug 9, 2022, 3:37 PM IST

வெளிநாட்டு வேலை மோகத்தால் மோசடி கும்பலிடம் சிக்கிய மகனை மீட்க கண்ணீருடன் தாய் கோரிக்கை
வெளிநாட்டு வேலை மோகத்தால் மோசடி கும்பலிடம் சிக்கிய மகனை மீட்க கண்ணீருடன் தாய் கோரிக்கை

வெளிநாட்டு வேலை மோகத்தால் கம்போடியா நாட்டிற்கு சென்று மோசடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டு தருமாறு தாய் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

நெல்லை: முனைஞ்சிப்பட்டி அருகே காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்த கலியன் - சிதம்பரவடிவு தம்பதியின் மகன் மகேஷ் (27) நாகர்கோவிலை சேர்ந்த ஏஜெண்டுகள் மூலம் தனது மகன் கம்போடியா நாட்டிற்கு வேலைக்கு சென்றதாகவும், அங்கு அவர்கள் கூறிய வேலையை கொடுக்காமல் மோசடி கும்பலிடம் தனது மகனை சிக்க வைத்ததாகவும் அவரது தாயார் சிதம்பரவடிவு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். தற்போது தனது மகனை நாட்டிற்கு அழைத்து வர பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அந்த மனுவில், ”நாகர்கோவிலைச் சேர்ந்த ஆண்ட்ரூ, அந்தோணி, சிவக்குமார் ஆகியோர் 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு எனது மகனை டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்காக கடந்த மாதம் 7ம் தேதி கம்போடியா நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடம் எனது மகனை வேலை செய்யும்படி கூறியுள்ளனர்.

வெளிநாட்டு வேலை மோகத்தால் மோசடி கும்பலிடம் சிக்கிய மகனை மீட்க கண்ணீருடன் தாய் கோரிக்கை

அந்த வேலையைப் பார்க்க விருப்பம் இல்லாமல் எனது மகன் சொந்த ஊர் திரும்ப முயற்சி செய்தும் அவனை அனுப்பாமல் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். இது குறித்து ஏஜெண்டுகளிடம் விசாரித்த போது இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் உனது வீட்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பணம் வாங்கிக் கொடு என்று கேட்டனர்.

அதன் பேரில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எனது கணவரின் வங்கி கணக்கு மூலம் ஆண்ட்ரூ அந்தோணிக்கு அனுப்பினோம். ஆனாலும் இதுவரை எனது மகனை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், ”2 லட்சம் ரூபாய் பணம் தந்தால் தான் நீ ஊருக்கு செல்ல முடியும்...!” என்று என் மகனின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை சட்ட விரோதமாக பறித்து வைத்துள்ளனர். எனவே எனது மகனை பத்திரமாக மீட்டு தரவும் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டி வரும் ஆண்ட்ரூ அந்தோணி மற்றும் சிவக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என மனுவில் சிதம்பர வடிவு கூறியுள்ளார்.

இதுகுறித்து மகேஷின் உறவினர் தாஸ் கூறுகையில், “கம்போடியா நாட்டில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலையில் சேர்த்து விடுவதாக அழைத்துச் சென்றுவிட்டு அங்கு ஆன்லைன் மூலம் பணமோசடி செய்யும் கும்பலிடம் மகேஷை சிக்க வைத்துள்ளனர்.

அந்த வேலையை செய்ய விரும்பாமல் சொந்த ஊருக்கு அனுப்பும்படி பலமுறை கேட்டும் அவனை அனுப்பாமல் ஏஜெண்டுகள் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தால் கொன்று விடுவோம் என மிரட்டி வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மகேஷை மீட்டு தர வேண்டும்” என தெரிவித்தார்.

இது குறித்து மகேஷின் தாய் சிதம்பர வடிவு கூறுகையில், ”நாகர்கோயிலை சேர்ந்த ஏஜெண்டுகள் எனது மகனை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று விட்டு அவனுக்கு தவறான வேலையை கொடுத்து அவனை ஊர் திரும்ப விடாமல் மிரட்டி வருகிறார்கள்.

எனவே எனது மகனை மீட்டுத் தர வேண்டும்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார். இதற்கிடையில் மகேஷ் கம்போடியாவில் இருந்தபடி வெளியிட்ட வீடியோவில் இங்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என தெரியவில்லை என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, எனவே என்னை பத்திரமாக மீட்டுக் கொடுங்கள்” என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கொத்தனார் வெட்டிக் கொலை...! உறவினர்கள் சாலை மறியல்...!

Last Updated :Aug 9, 2022, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.