ETV Bharat / state

சாலை வசதியின்றி தத்தளிக்கும் மலைவாழ் மக்கள்: காற்றோடு போன அமைச்சர்களின் உறுதி.. கண்டுகொள்ளுமா அரசு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 6:15 PM IST

சாலை வசதியின்றி தத்தளிக்கும் மலைவாழ் மக்கள்
சாலை வசதியின்றி தத்தளிக்கும் மலைவாழ் மக்கள்

Tribal people struggling: போடிநாயக்கனூர் குரங்கணி அருகே தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள சென்ட்ரல் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால் கொட்டும் மழையில் வயதான மலைவாழ் பழங்குடி பெண்மணியை சுமார் 5 கிலோ மீட்டர் டோலி கட்டி தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் அவல நிலை குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு..

சாலை வசதியின்றி தத்தளிக்கும் மலைவாழ் மக்கள்

தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குரங்கணி மலைவாழ் கிராமம். இங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சென்ட்ரல் ஸ்டேஷன் குக்கிராமம். இதற்கு அருகாமையிலேயே முட்டம், முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன் போன்ற பகுதிகள் உள்ளன. இப்பகுதிகள் முழுவதும் தேயிலை, ஏலக்காய், மிளகு, காபி, இலவம் பஞ்சு போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், போடிநாயக்கனூரில் இருந்து குரங்கணி வரை மட்டுமே தார்ச் சாலை உள்ள நிலையில், குரங்கணியில் இருந்து இப்பகுதிகளுக்குச் சாலை வசதி இல்லை. இதனையடுத்து, இம்மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் சாலை வசதி, இந்நாள் வரை கனவாகவே இருந்து வருகிறது. இப்பகுதிகளில், சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். சென்ட்ரல் ஸ்டேஷன் பகுதியில் மட்டும் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் தொழில் என்று பார்க்கையில் முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த கூலி வேலைகளையே இவர்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் கூட இப்பகுதிகளுக்குக் கொண்டு வரப்படும் வாக்குப் பெட்டி மற்றும் வாக்குச்சாவடிக்கான உபகரணங்கள் குதிரைகள் மற்றும் கழுதைகள் மூலமாகவே இன்று வரை கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அவ்வளவு தானா என்று சிந்தித்துப் பார்க்கையில், செல்போன் மற்றும் தொலைப்பேசி வசதிகளும் முறையாகச் செய்து தரப்படவில்லை.

முன்பு டாப் ஸ்டேஷன் வரை ஜீப் போக்குவரத்து இருந்த நிலையில், தற்போது வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக ஜீப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், டாப் ஸ்டேஷன் செல்லும் சாலைகள் முழுவதும் புதர் மண்டி ஒற்றையடிப் பாதை போல் காட்சி அளித்து வருகிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவச் சிகிச்சைக்காக சுமார் ஐந்தரை கிலோமீட்டர் கால்நடையாகவோ அல்லது டோலி மூலமாகவோ குரங்கணி வரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இப்படி எந்த வசதியுமின்றி அக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்ட்ரல் ஸ்டேஷனில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் டேவிட். இவரது மனைவி வேளாங்கண்ணி(வயது 60). கடந்த ஒரு வாரக் காலமாகக் காலில் ஏற்பட்ட காயத்தினால் வீட்டை விட்டு வெளியேறவே முடியாமல் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(ஜன.7) முன்தினம் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முறையான தகவல் தொடர்பு வசதி மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் கொட்டும் மழையில் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து குரங்கணி வரை சுமார் 5 கிலோ மீட்டர் புதர் மண்டிய ஒற்றையடி மலைப்பாதையில் வேளாங்கண்ணியை ஒரு போர்வையில் டோலி கட்டி தூக்கிச்சென்றனர்.

மழை காரணமாகச் சேரும் சகதியும் நிறைந்து புதர் மண்டிய வழுக்கும் மலைப் பாதையில் புதர்களை அப்புறப்படுத்திக் கொண்டே மிகுந்த சிரமத்துடன் சுமார் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வேளாங்கண்ணியை டோலி மூலம் குரங்கணி வரை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து உடனடியாக போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளாங்கண்ணிக்குச் சர்க்கரை நோய் அதிகமாகி உள்ளது கண்டறியப்பட்டது. மேலும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட வேளாங்கண்ணிக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாலை வசதி வேண்டிப் போராடிவரும் அப்பகுதி மக்களுக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படாததால் இப்பகுதி மலைவாழ் பழங்குடியின மக்கள் மிகுந்த பரிதவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், முன்னதாக தேர்தலின் போது தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை சாலை வசதி, செல்போன் டவர்கள் அமைத்து தரப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

ஆனால் ஏனோ இன்று வரை அப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வசதிகளின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அம்மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு முறையான சாலை வசதி மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "அரசின் பொங்கல் தொகுப்பில் மண் பானை சேர்த்து வழங்க வேண்டும்" - மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.