தமிழ்நாடு முழுவதும் உள்ள கள்ளர், மறவர் உள்ளிட்ட 68 சமூக மக்களுக்கு, கடந்த 1979ஆம் ஆண்டிற்கு முன்பாக வழங்கிய டிஎன்டி ஒற்றைச் சான்றிதழை மீண்டும் வழங்கக்கோரி, சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தை சீர்மரபினர் நலச்சங்கத்தினர் முற்றுகையிட முயன்றனர்.
இதன் காரணமாக, பெரியகுளம் தென்கரை அக்ரஹார தெருக்கள்(வடக்கு, தெற்கு) முழுவதும் காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில், சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
துணை முதலமைச்சரின் இல்லம் நோக்கி வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் அய்யாக்கண்ணுவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விரைவில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க; யாரும் யாருக்கும் அடிமை இல்லை'- உறுதியேற்ற ஓபிஎஸ்