ETV Bharat / state

விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா? - 'என் வழி தனி வழி' - ரஜினி ஸ்டைலில் சீமான் பதில்!

author img

By

Published : Jul 5, 2023, 5:23 PM IST

Etv Bharat
Etv Bharat

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ''என் வழி தனி வழி. நாங்கள் தான் போட்டியிடுவோம். கூட்டணி பற்றி இனி என்னிடம் கேட்காதீர்'' என சீமான் கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

தேனி மாவட்டத்தில் நடந்த ‘நாம் தமிழர் கட்சி’ ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக போடிநாயக்கனூருக்கு வருகை தந்த சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருக்குமா, விஜய்க்கு ஆதரவு கொடுப்பீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு அவர் கூறியதாவது, ''நான் அரசியலுக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றன. எனது கொள்கை வேறு. என் வழி தனி வழி. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்.

என் தலைவர் பிரபாகரனை நான் ஏற்றுக் கொண்டதைப் போல் விஜய் ஏற்பாரா? மற்ற அரசியல் கட்சியினர் ஏற்பார்களா? விவசாயத்தை அரசு வேலையாக மாற்றுவேன். அது உங்களுக்கு நகைச்சுவையாக தான் இருக்கும். அதை அவர்கள் ஏற்பார்களா?. என் பாதை தனி, பயணம் தனி, லட்சியம் தனி, கொள்கை தனி. இதில் மற்றவர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டு சண்டையிட மாட்டேன். நான் தனித்து சண்டையிடுவேன்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''ஒரு ஆட்சியின் சாதனை என்பது அரசுப் பள்ளியில் படித்து அதிகளவிலான மருத்துவர்கள், ஆட்சியாளர்கள் வெளி வருகிறார்கள் என்பது தான். பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவம் வழங்குதல் முன்னிட்டுவைகளில் இருக்கலாம். இங்கு என்ன நடக்குது என்றால் மருத்துவத்திற்கு வந்த சிறு பிள்ளையின் கையை வெட்டிவிட்டீர்கள். இந்த அளவு தான் உங்கள் சாதனை இருக்கிறது. இதைப் பார்க்காமல் டாஸ்மாக்கில் 45 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டம் தீட்டுவது. குடிப்பழக்கம் உள்ளவர்களை அதிகரிக்கத் தான் செய்கிறீர்கள். இதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும்.

குண்டு போட்டு கொல்வது மட்டும் இனப்படுகொலை என்று சொல்ல முடியாது. குடிக்க வைத்துக் கொள்வதும் இனப்படுகொலை தான். மதுவை தெருதோறும் திறந்துவிட்டு, தெருவுக்கு இரண்டு படித்தவன் இருப்பதை விட்டுவிட்டு, இரண்டு கடைகளை திறந்து வைத்துவிட்டு, இதில் எப்படி இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயல்படும். அனைத்தும் வெட்டிப் பேச்சு. இங்கு எப்படி இளைஞர் நலன் இருக்க முடியும். தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகப் பகுதிகளுக்கு கனிம வளம் கடத்தப்படுகிறது.

அங்கு உள்ள மலைகளை அவர்கள் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு அளிக்கப்படும் கனிம வளங்களால் கட்டப்படும் கட்டடங்கள் வருங்கால சந்ததியர்களின் வீடாக இருக்காது. அவர்களின் சமாதியாகத் தான் இருக்கும். அளிக்கப்படும் ஒவ்வொரு மலைகளிலும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இவை அனைத்தையும் நாம் அழித்து வருகிறோம். இப்போது நாம் வாங்கும் ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய். இப்போதே பதினைந்து ரூபாய்க்கு நாம் வாங்குகிறோம் என்றால் வருங்கால சங்கதிகள் என்ன விலை கொடுத்து தண்ணீர் வாங்குவார்கள்? ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குவார்கள்.

இதை எப்படி நம் வளர்ச்சி என்று சொல்ல முடியும். தண்ணீர் விற்பவனுக்குத் தான் லாபம். தற்போது ஏன் கத்திரிக்காய், தக்காளி, காய்கறிகளின் விலை ஏறி உள்ளது. காய்கறிகளை நீங்கள் அண்டை மாநிலங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதால் தான். ஏன் இங்கே நீங்கள் விளைவிக்கவில்லை” என சீமான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் ஆளும் கட்சியைப் பொறுத்து மேகதாது விவகாரம் பார்க்கப்படுகிறது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.