ETV Bharat / state

கம்பம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் - சிறப்புச் சார்பு ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 11:00 PM IST

police-inspector-sentenced-to-life-imprisonment-in-kambam-womans-murder-case
சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை

Theni murder: கம்பம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்புச் சார்பு ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி: கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், அமுதா தம்பதியருக்கு ருத்ரா என்ற பெண் உள்ளார். இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமுதா கம்பம் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார்.

அப்போது கம்பம் காவல் நிலையத்தில் பணியாற்றி ஜெயக்குமாருக்கும் அமுதாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவர்கள் இருவரும், திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர். இதனால் அமுதாவின் கணவர் பிரகாஷ் அவரை விட்டுப் பிரிந்து வேறொரு திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றார்.

இதனையடுத்து சிறப்புச் சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், அமுதாவிற்குத் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு, அமுதா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அமுதாவின் மகளான ருத்ரா என்பவர் தனது தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கொடுத்த புகாரின் அடிப்படையில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களைச் சேகரித்தனர். பின்னர் அமுதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த விசாரணையில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், அமுதாவைக் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்கள், முக்கிய தடயங்கள் அடிப்படையில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டு குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் கொலை செய்த குற்றத்திற்காக ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் 6 மாதக் கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பினைத்தொடர்ந்து குற்றவாளி ஜெயக்குமாரைச் சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: முத்துப்பேட்டை அருகே கொடூரம்.. 6 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட மூதாட்டி.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.