தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கானா விலக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுதவிர கரோனா பரிசோதனை மையம், சிறப்பு சிகிச்சை மையம் உள்ளிட்டவை இங்கு உள்ளன.
இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பராமரிப்பு, தூய்மைப் பணியில் பிரபல தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனையை சுத்தம் செய்வதற்கான ரசாயன பொருள்கள் உள்ளிட்ட உபகரணங்களை வைப்பதற்காக மருத்துவமனையில் இருந்த பழைய கட்டடத்தை குடோனாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 24) காலை அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், குடோனில் இருந்த ரசாயன பொருள்கள் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
குடோனுக்கு அருகிலிருந்த ரத்த வங்கி, கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, உள்நோயாளிகள் பிரிவில் இருந்த சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே நோயாளிகள் வெளியே அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டனர். கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
குடோனில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து கானா விலக்கு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா வார்டில் படுக நடனம் - நோயாளிகள் உற்சாகம்