ETV Bharat / state

மது குடிக்க பணம் தராத தாய் அடித்துக் கொலை வழக்கு - மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 5:25 PM IST

பெரியகுளத்தில் கோடாரியால் தாக்கி தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
பெரியகுளத்தில் கோடாரியால் தாக்கி தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

theni murder case: பெரியகுளம் கடந்த ஆண்டு டிசம்பர் மது குடிக்க பணம் தராத தாயை அடித்து கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தேனி: கடந்த டிசம்பர் மாதம் பெரியகுளம் பகுதியில் உள்ள மஞ்சளாறு கிராமத்தில் மகனே தாயை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன்- ஜோதிலட்சுமி தம்பதி. இவர்களது மகன் மருதுபாண்டி (வயது 23). கஞ்சா மற்றும் குடி போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படும் மருதுபாண்டி வீட்டில் இருந்த தாய், தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதையே வழக்கமாக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று தாய் ஜோதிலட்சுமியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் மருதுபாண்டி. அப்பொழுது தாய் ஜோதிலட்சுமி எந்த வேலைக்கும் செல்லாமல் இப்படி பிழைப்பதற்கு பிச்சை எடுத்துப் பிழை என சொல்லி மருதுபாண்டியை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி வீட்டில் இருந்த மரம் வெட்டும் கோடாரியை கொண்டு ஜோதிலட்சுமியின் தலையின் பின் பக்கத்தில் பலமாக தாக்கி உள்ளார். இதனால் காயமடைந்த தாய் ஜோதிலட்சுமி கீழே விழுந்துள்ளார். அப்போது மீண்டும் அவர் முகத்தில் கோடாரியை கொண்டு தாக்கியதில் ஜோதிலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: ஆசிரியை, ஆசிரியர் மாயம்.. ரத்தக் கறையுடன் நின்ற கார்.. கோவையில் நடந்தது என்ன?

இந்தக் கொலை சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் சாட்சிகளின் அடிப்படையிலும், கொலை செய்த மருதுபாண்டி குற்றத்தை ஒப்புக்கொண்டதாலும் அவரை குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறி நீதிபதி கோபிநாத் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி மருதுபாண்டியை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் பால் வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.