ETV Bharat / state

அரி கொம்பன் தாக்கி ஒருவர் படுகாயம் - வனத்துறை சார்பில் நிதியுதவி!

author img

By

Published : May 29, 2023, 9:23 PM IST

Ari komban: தேனியில் அட்டகாசம் செய்து வரும் அரி கொம்பன் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு வனத்துறை சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை 'வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்' வழங்கினர்.

Etv Bharat
Etv Bharat

தேனி: கம்பம் நகர் பகுதிக்குள் மே 27 ஆம் தேதி காலை திடீரென புகுந்த அரி கொம்பன் யானை, வாகனங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் உலா வந்தது. எனவே, கம்பம் பகுதியில் அரி கொம்பன் (Ari komban) நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கம்பம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அரி கொம்பன் தஞ்சம் அடைந்திருந்தது. பிறகு அங்கிருந்து கூடலூர் சாலை பகுதிக்கு சென்றது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்தை நிறுத்திய வனத்துறையினர் யானையைப் பின் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் மே 28 ஆம் தேதி அதிகாலை அரி கொம்பன் யானை சாமாண்டிபுரம் வழியாக சுருளிப்பட்டிக்கு நுழைந்தது. சுருளிப்பட்டி ஊருக்குள் வராமல் வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், சுருளிப்பட்டி வனப்பகுதிக்குள் யானை தஞ்சம் அடைந்தது. இதனால், சுருளி அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

மேலும், பொள்ளாச்சி பகுதியில் இருந்து பிரத்யேக வாகனம் மூலம் வரவழைக்கப்பட்ட சுயம்பு மற்றும் முத்து ஆகிய கும்கி யானைகள் (Kumki Elephants Swayambu and Muthu) தயார் நிலையில் கம்பம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதிக்குள் தொடர்ந்து தஞ்சம் அடைந்துள்ள அரி கொம்பன் மீண்டும் நகர் பகுதிக்குள் வராமல் வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் யானை விரட்டும் போது இருசக்கர வாகனத்தில் சென்ற கம்பம் நகர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் யானை இடித்ததில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பால்ராஜை 'வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்' மற்றும் 'ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி' ஆகியோர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி அவரது குடும்பத்தினருக்கு வனத்துறையின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை 'அமைச்சர் மதிவேந்தன்' வழங்கினார். உடன் 'தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா' மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

அதேபோல கம்பம் நகர் பகுதிக்குள் புகுந்த யானை அங்கிருந்த ஆட்டோவை மிதித்து சேதப்படுத்திய நிலையில், சேதமடைந்த ஆட்டோவின் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை 'அமைச்சர் மதிவேந்தன்' வழங்கினார். மேலும் விவசாய நிலங்களில் புகுந்து யானை ஏற்படுத்திய சேதத்தினை வருவாய்த்துறையினர் கணக்கிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: அரி கொம்பன் யானை அகப்படுமா..? 144 தடை உத்தரவு நீடிக்குமா..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.