ETV Bharat / state

அரி கொம்பன் யானை அகப்படுமா..? 144 தடை உத்தரவு நீடிக்குமா..?

author img

By

Published : May 29, 2023, 3:45 PM IST

தேனி கம்பத்தில் உலா வரும் அரி கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் 3 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு நீடித்து வருகிறது.

Etv Bharat
Etv Bharat

அரி கொம்பன் யானை அகப்படுமா..?

தேனி: கேரள மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்டோரை கொன்று, மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்துவந்த (Ari Komban) அரி கொம்பன் என்கிற ஒற்றை காட்டு யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர்.

இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானையின் கழுத்தில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தி தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயில் அருகே உள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்திற்குட்பட்ட வனப்பகுதிக்குள் கொண்டு போய்விட்டனர். அங்கிருந்து தமிழ்நாடு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த (Ari Komban) அரி கொம்பன் யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.

இதனால், மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அங்கிருந்து மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட இரவங்களாறு, மணலாறு ஆகிய பகுதிக்குள் வலம் வந்த யானை அங்கிருந்து, கடந்த மே 26ஆம் தேதி இரவு ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

பின்னர், கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து அட்டகாசம் செய்வதாக விவசாயிகள் மூலம் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த தமிழ்நாடு, கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்குள் யாரையும் செல்ல விடாமலும், யானையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, யானையை அப்பகுதியிலிருந்து விரட்ட பொள்ளாச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட சுயம்பு மற்றும் முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகளுடன் வனத்துறையினர் சுருளி பகுதிக்குள் காத்திருந்தனர். இதனிடையே, யானை கண்காணிப்பதாக ட்ரோன் பறக்க விட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கம்பம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து தடை விதித்தும் கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை விதித்தும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “அரி கொம்பன் யானையை விரட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் வனத்துறை செய்து வருவகிறது. இதனிடையே யாரும் அதன் அருகே செல்வதோ, அதனை படம் பிடிக்கவோ முயற்சிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் பொதுமக்களைக் கண்டும் யானை அவர்களை விரட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறது” என தெரிவித்தார்.

அரி கொம்பனை பிடிப்பதற்காக ஏற்கனவே, இரண்டு யானைகள் உள்ள நிலையில், மேலும் உதயன் என்ற கும்கி யானையும் அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று காலை சுருளிப்பட்டி பகுதியில் உள்ள சுருளி அருவி வனப்பகுதிக்கு அரி கொம்பன் யானை சென்ற நிலையில் சுருளி அருவி பகுதிக்குள் யாரும் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் யானையின் நடமாட்டத்தையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அரி கொம்பனை நகர் பகுதிக்குள் வரவிடாமல் வனத்துறையினர் தடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாகவே இருக்கின்றது. அரி கொம்பனை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதிக்கு விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சுருளிப்பட்டி வனப்பகுதிக்குள் யானை சென்றுவிட்டதால் வனத்துறை அதிகாரிகள் அதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும், அரி கொம்பனை பிடிப்பதற்கு மூன்று யானைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக வன அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கின்றனர். வனப்பகுதிக்குள் சென்று விட்டதால் அதன் நடமாட்டத்தை மட்டும் தற்போது வனத்துறையினர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டம் காட்டும் அரி கொம்பன் யானை..! சுருளி வனப்பகுதியில் சுற்றி வளைக்க காத்திருக்கும் கும்கி யானைகள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.