Sugarcane: கூட்டுறவுத் துறையில் முறைகேடு? - அரசுக்கு கரும்பு வழங்க விவசாயிகள் மறுப்பு

author img

By

Published : Jan 6, 2023, 6:29 PM IST

Etv Bharat
Etv Bharat ()

பொங்கல் கரும்பு கொள்முதலில் கூட்டுறவுத் துறையினர் அரசு நிர்ணயித்த விலையை விட குறைவான விலைக்கு கரும்பு வாங்கி முறைகேட்டில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Sugarcane: கூட்டுறவுத் துறையில் முறைகேடு? - அரசுக்கு கரும்பு வழங்க விவசாயிகள் மறுப்பு

தேனி: பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பை 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்குத் தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் தமிழ்நாடு அரசு கரும்பை அறிவிக்காத நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொங்கல் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் ஆறு அடி நீளம் கொண்ட ஒரு கரும்பின் விலை 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பொங்கல் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் இன்று (ஜன.06) முதல் பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்குவதற்காக தேவதானப்பட்டி பகுதிகளில் பொங்கல் கரும்பு பயிரிட்ட விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் பணியை கூட்டுறவுத் துறையினர் தொடங்கி, அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் உள்ள கரும்பை ஆய்வு செய்து, அதில் ஆறு அடி நீளத்திற்கு மேல் உள்ள கரும்பை மட்டுமே விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்து கூட்டுறவுத் துறையின் இடம் வழங்கி வருகின்றனர்.

ஆனால், அரசு அறிவித்த 33 ரூபாய் கரும்பு விலையை கொள்முதல் செய்யும் கூட்டுறவு அதிகாரிகள் வழங்க மறுத்ததோடு 25 ரூபாய்க்கு தான் பொங்கல் கரும்பு எடுப்பதாகவும்; மீதமுள்ள எட்டு ரூபாய்க்கு பல்வேறு செலவுகள் இருப்பதாகவும் தெரிவித்து விவசாயிகளிடம் வற்புறுத்தி, பொங்கல் கரும்பு கொள்முதல் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுவதோடு அரசு அறிவித்த விலையைக் குறைத்துள்ள நிலையில் ஆறு அடிக்கு கீழ் உள்ள கரும்புகளை எடுக்க மறுப்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் எனவும் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'அரசு அறிவித்த 33 ரூபாய் வழங்காமல் வேளாண்துறை அதிகாரிகள் 25 ரூபாய் தான் வழங்குகின்றனர். அதில் கரும்பை அறுவடை செய்து லாரிகளில் ஏற்றும் வரை உள்ள செலவு ஒரு கரும்பிற்கு ஐந்து ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. இந்த செலவும் விவசாயிகளைச் சார்ந்ததால் ஒரு கரும்பிற்கு 20 ரூபாய் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு அறிவித்த 33 ரூபாய்க்கு கரும்பு கொள்முதல் செய்யப்படாமல், விலையை குறைத்து கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அதிக அளவில் கரும்பை கழிப்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். பெரும்பாலான விவசாயிகள் அரசுக்கு கரும்பு வழங்க முன்வர மறுத்து வருகின்றனர். அரசு அறிவித்த 33 ரூபாய்க்கு கரும்பு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "பொங்கல் பரிசில் தேங்காய் கொடுங்க" இளநீரில் ஸ்டிக்கர் ஒட்டி பாஜக போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.