ETV Bharat / state

சோத்துப்பாறை அணையில் நீர் திறப்பு... 136 நாட்களாக குறைக்கப்பட்ட தண்ணீர் திறப்பு! விவசாயிகள் வேதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 2:18 PM IST

Sothuparai Dam water issue
சோத்துப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு

Sothuparai Dam water issue : முதல் போக சாகுபடிக்காக சோத்துப்பாறை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 152 நாட்கள் நீர் திறந்து விடப்பட்ட நிலையில் நடப்பாண்டு வெறும் 136 நாட்களே தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறியதால் விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

சோத்துப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் பாசன பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 865 ஏக்கரில் முதல் போக சாகுபடி துவங்கியது. அதற்காக தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் சுமார் 30 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று முதல் 45 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடியும், அடுத்த 31 நாட்களுக்கு 27 கன அடியும், அதைஅடுத்த 60 நாட்களுக்கு 25 கன அடியும் நீர் வரத்தைப் பொறுத்து, தேவைக்கேற்ப 136 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்று நீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றனர்.

மேலும் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை கொண்டு முறையான பாசன அடிப்படையில் நீர் பங்கிட்டு வழங்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் பாசனத்திற்கு 152 நாட்கள் நீர் திறந்து விடப்பட்டு வந்து நிலையில், இந்த ஆண்டு மட்டும் 136 நாட்களாக குறைத்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதனால் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விவசாயி குமரன் கூறுகையில், "தேனியைச் சுற்றியுள்ள நிலங்கள் இந்த சோத்துப்பாறை அணையின் நீரை நம்பி உள்ளது. கடந்த ஆண்டு 152 நாள் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு 136 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் என தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்லுகிறார்கள். அதேபோல கடந்த மாதமே திறக்கப்பட வேண்டிய நீரும் காலதாமதமாக தற்போது தான் திறந்துள்ளனர்.

அதற்கு சாஸ்திரம் சம்பரதாயம் பார்த்தார்களா என எதுவும் தெரியவில்லை. அதனால் இதுக்குமேல் தான் நாங்கள் நெல் பயிரிடும் வேலையை துவக்க வேண்டும். இதனால் காலம் அதிகரித்துக் கொண்டே செல்லும். அந்த நேரத்தில் தண்ணீர் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றோம்.

கடந்த ஆண்டு 152 நாள் தண்ணீர் திறந்த போதே, தண்ணீர் பத்தாமல் தவித்தோம். இந்நிலையில் 136 நாட்களாக குறைத்ததால் இதன் விளைவு, பசிக்கும்போது உணவு இல்லாதது போல், தண்ணீர் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் இருந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் தமிழ்நாடு அரசுதான் அடுத்தடுத்து வரக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்... கடைசி தேதி எப்போ தெரியுமா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.