ETV Bharat / state

காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை காதலனுடன் தீர்த்து கட்டத் திட்டம்.. பள்ளி மாணவியிடம் போலீசார் விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 11:42 AM IST

theni
தேனி

தேனியில் காதலை எதிர்த்த தந்தையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டிய பள்ளி மாணவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இச்சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தேனி: பழனிசெட்டிபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் வேணுகோபால் பாண்டியன் (வயது 55). இவருக்கு 16 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். வேணுகோபால் பழனிசெட்டிபட்டியில் பழைய இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு சுமார் 8 மணி அளவில் வேணுகோபால் தலையில் பலத்த காயங்களுடன் நடுரோட்டில் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

அவர் அருகிலே அவரது இருசக்கர வாகனமும் விழுந்து கிடந்ததால், ஸ்கூட்டரில் செல்லும்போது தவறி விழுந்து தலையில் அடிபட்டதாக கருதி அப்பகுதியில் உள்ளோர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அப்போது, அவரது தலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக அவரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரிணையை தொடங்கினர். அப்போது அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வேணுகோபால் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஒரு சிலர் அவரை பின்தொடர்வது தெரிய வந்தது.

மேலும் இச்சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே கேட்பாரற்று ஒரு இருசக்கர வாகனமும் கிடந்துள்ளது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அந்த விசாரணையில், வேணுகோபாலின் மகள் பெரியகுளத்தைச் சேர்ந்த இளைஞரை காதலிக்கும் விவகாரம் தெரிய வந்தது.

இது தொடர்பாக அந்த இளைஞரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரும் அவரது நண்பர்களான பெரியகுளத்தைச் சேர்ந்த இருவருடன் திட்டமிட்டு வேணுகோபால் பாண்டியனை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளி அரிவாளால் வெட்டியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது வேணுகோபால் மகள் கடந்த ஆண்டு தேனியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், காதல் விவகாரம் காரணமாக அவரை வேணுகோபால் பாண்டியன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வேணுகோபால் தாயார், தனது மகனை கண்டித்ததுடன் பேத்தியை அழைத்துக் கொண்டு வைகை அணை அருகே உள்ள சிறுமியின் தாய்வழி பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு சிறிது காலம் இருந்த பின்னர் மற்றொரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு மாத காலம் தங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பேத்தியை அழைத்துக்கொண்டு பெரியகுளத்தில் உள்ள தனது இளைய மகன் வீட்டிற்குச் சென்ற வேணுகோபாலின் தாயார் அங்கு தங்க வைத்துள்ளார்.

பின்னர் வேணுகோபாலும் அவரது மனைவியும் பெரியகுளம் சென்று, படிப்பு பாழாகிறது என்று கூறி தங்களுடன் வருமாறு மகளை அழைத்தபோது மகள் வர மறுத்து உள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கும் அந்த இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து இளைஞரை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இருந்த போதும் அந்த சிறுமியும், இளைஞனும் மிகவும் நெருங்கி பழகி உள்ளனர். மேலும் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று தங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வேணுகோபால் இருவரையும் எச்சரித்து வந்த நிலையில், கடந்த வாரம் இளைஞனும், சிறுமியும் இணைந்து காதலுக்கு இடையூறாக உள்ள தந்தை வேணுகோபால் பாண்டியனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

அதன்படி கடந்த வாரம் வேணுகோபால் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் தயாராக காத்திருந்த இளைஞர் வேகமாகச் சென்று அவரை இடித்து தள்ள முயன்றுள்ளார். அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் வீட்டிற்கு சென்று விட்டார். முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், 2வது முறையாக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அவரது நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க முடிவு செய்த சிறுமி, காதலன் தீட்டிய திட்டப்படி பெரியகுளத்தில் இருந்து தனது தந்தையின் வீட்டிற்கு வந்து, இனிமேல் தான் தந்தையின் சொல்படி கேட்டு நடப்பதாகவும், தனது படிப்பு வீணாகி வருகிறது. இதனால் தன்னை தேனியில் உள்ள பள்ளியில் சேர்த்து விடுமாறும் கூறியுள்ளார்.

பலமுறை கெஞ்சியும் வராத மகள், தற்போது மனமாற்றம் ஏற்பட்டு தன்னிடம் திரும்பி வந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்த வேணுகோபால், சிறுமியை பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பில் சேர்த்துள்ளார். இந்நிலையில், தாய் - தந்தைக்குத் தெரியாமல் மகளோ மொபைல் போனை பயன்படுத்தி காதலனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 27ஆம் தேதி இரவு தனக்கு "ஷாக்ஸ்" வாங்கி வருமாறு தந்தையை கடைக்கு அனுப்பி வைத்தார் மகள். தனது தந்தை கடைக்கு செல்வது மற்றும் திரும்பி வருவது குறித்த அனைத்து தகவல்களையும் தனது காதலனுக்கு மொபைல் போன் மூலமாக அளித்த வண்ணம் இருந்துள்ளார்.

அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் தனது 2 நண்பர்களுடன் தயாராக காத்திருந்த இளைஞர், வேணுகோபாலை பின் தொடர்ந்து, ஆள்நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதி வந்தவுடன் அவரை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு, மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாக வெட்டியுள்ளார். வெட்டி முடித்ததும் மூவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அங்கே நடந்த விவரங்களை தனது காதலிக்கு போன் மூலம் தெரிவித்ததாக" விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் தனது தந்தையை கொலை செய்வதற்காக வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் என அனைத்தையும் எடுத்து சிறுமி தனது காதலனிடம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தற்போது பிடிபட்டவர்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேணுகோபால் பாண்டியன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் காதலன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பலமுறை சிறை சென்று வந்தவர் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: நகர்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் - அமைச்சர் மா.சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.