ETV Bharat / state

நீலகிரியில் சிறுமி உட்பட 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 6:14 PM IST

கூடலூரில் சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது
கூடலூரில் சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது

Gudalur leopard Catch: நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் சிறுமி உட்பட இருவரை சிறுத்தை தாக்கியது. இதில், இருவரும் உயிரிழந்த நிலையில், அந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

கூடலூரில் சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது

நீலகிரி: கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களை தாக்கி வருவதும் அதிகரித்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 பெண்களை சிறுத்தை தாக்கியது. இதில், படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து, மேங்கோ ரேஞ்ச் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் வீடு திரும்பிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நான்சி (வயது 3) என்ற சிறுமியை, தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த தொழிலாளர்கள் தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர்.

பின்னர், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுத்தையின் தாக்குதல் காரணமாக ஏற்கனவே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், இன்று இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், சிறுத்தையை சுட்டுப் பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று இரவு (ஜனவரி 7) சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், கூடலூர் பகுதியில் முழு கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க 2 வனக் கால்நடை மருத்துவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். சிறுத்தையை பிடிக்க 6 கூண்டுகள் அமைத்தனர். மேலும், சிறுத்தை நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதியில் இருந்த சிறுத்தையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டது. யானை மேல் அமர்ந்து வனக்கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து, சிறுத்தையை வலை போட்டு பிடித்து கூண்டில் அடைத்தனர். பிடிபட்ட சிறுத்தை நான்கு வயது ஆண் சிறுத்தை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், சிறுத்தையை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டுள்ளது, அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீலகிரியில் சிறுத்தை தாக்கி குழந்தை, பெண் உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.