கோடநாடு கொள்ளை: சயான் வாக்குமூலத்தால் சிக்கும் எடப்பாடி?

author img

By

Published : Aug 18, 2021, 11:01 PM IST

kodanad-robbery-sayan-new-confession-possible-to-include-edapadi-palanisamy-in-case

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில் கொள்ளையை அரங்கேற்றியதாக கோடநாடு கொள்ளை வழக்கின் முதல் குற்றவாளி சயான் அளித்த வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

உதகை: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது.

இங்குள்ள சொகுசு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது, இரவு காவலில் இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோவையைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சயான், வாளையாறு மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ்சாமி உள்ளிட்ட 11 பேருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறி, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீசன், ஜம்சீர் அலி, உதயகுமார் உள்ளிட்ட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சயானுக்கு நிபந்தனை ஜாமீன்

இந்த வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதில், சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில், கடந்த மாதம் சயானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

kodanad-robbery-sayan-new-confession-possible-to-include-edapadi-palanisamy-in-case
சயான்

தற்போது, நிபந்தனை ஜாமீனில் உதகையில் சயான் தங்கி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி, வழக்கு விசாரணையின் போது கோத்தகிரி காவல்துறையினர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபாவிடம் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சயானின் புதிய வாக்குமூலம்

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி காவலர்கள் சம்மன் வழங்கினர்.

அதனைப் பெற்றுக்கொண்ட சயான் நேற்று (ஆகஸ்ட் 17) உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு ஆஜரானா சயான்

விசாரணையில், "ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரும் , எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான கனகராஜ் தன்னிடம் கூறியபடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூடலூர் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரியும், அதிமுகவின் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளருமான சஜீவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கோடநாடு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.

அதிமுக ஆட்சியில் இருந்ததால் உயிருக்கு பயந்து அப்போதையை விசாரணையின்போது என்னால் இதனைக் கூற முடியவில்லை" என வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பயத்தில் முன்னாள் முதலமைச்சர்

கோடநாடு கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி விசாரணைக்கு மீண்டும் வரவுள்ளது.

அன்றைய தினமோ, அதற்கு முன்னதாக சயானின் புதிய வாக்குமூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

குற்றவாளிகள் தரப்புக்கு உதகையைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்த நிலையில், தற்போது கோடநாடு வழக்கில் அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஆளுநருடன் ஓபிஎஸ் - இபிஎஸ் நாளை சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.