தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நேரு நகர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர், நகைக்கடை அதிபர் சலீம். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளதாகக் கூறி, அவருக்கு சிகிச்சையளித்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி ஜூலை 29ஆம் தேதியன்று மாலை உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து அவரது உடல் பட்டுக்கோட்டை பெரிய பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சலீம் மனைவி, அவரது குடும்பத்தினர்கள் சலீம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், புதைக்கப்பட்ட அவரது உடலைத் தோண்டி எடுத்து அரசு மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு செய்ய வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும் சலீமின் குடும்பத்திற்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உதவி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி வரும் நிலையில், சலீம் மனைவி, அவரது குடும்பத்தினர் சலீம் மரணம் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொடுத்து, தனது கணவர் மரணத்திற்கு நீதி வேண்டும் என ஆதரவு திரட்டி வருகின்றனர்.