கோமாவில் உள்ள இளைஞர் சிகிச்சைக்கு செவிசாய்க்குமா அரசு?

author img

By

Published : Aug 9, 2021, 7:53 PM IST

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட கோமா இளைஞர் தொடர்பான காணொலி

வாகன விபத்தில் படுகாயமடைந்து கடந்த 7 வருடங்களாக கோமாவில் இருக்கும் மகனுக்கு சிகிச்சையளிக்க, வாகன தீர்ப்பாயத்தால் வழங்க உத்தரவிடப்பட்ட இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பெற்றோரின் நிலை காண்போரை கண் கலங்கச் செய்தது.

தஞ்சாவூர்: தஞ்சை பொட்டுவாச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு கல்லூரிக்குச் செல்லும் வழியில், வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த ஸ்டாலின், இன்றுவரை மருத்துவமனையில் கோமா நிலையிலேயே இருந்து வருகிறார்.

விபத்து தொடர்பாக ஸ்டாலினின் குடும்பத்தினரால், 2016ஆம் ஆண்டு தஞ்சாவூர் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கிட தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட கோமா இளைஞர் தொடர்பான காணொலி

7 வருடங்களாக கோமா

இருப்பினும் ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர், இன்றுவரை இழப்பீட்டை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டாலினின் நிலை குறித்து மனு அளிப்பதற்காக, அவரது பெற்றோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர்.

அப்போது அவர்கள் பேசுகையில், “கடந்த 7 ஆண்டுகளாக ஸ்டாலின் கோமாவில் இருந்து வருவதால், குடும்பமே நிலைதடுமாறி சீர்குலைந்துள்ளது. ஸ்டாலினின் மருத்துவ செலவிற்காக, எனது மூத்த மகன் கல்லூரிப் படிப்பை இடை நிறுத்தம் செய்துவிட்டு, கூலி வேலை செய்து வருகிறார். நண்பர்கள், உறவினர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.

இருப்பினும் ஸ்டாலினின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஸ்டாலினுக்கு இனிவரும் காலங்களில் எந்தவித மருத்துவ செலவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அரசு சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து, ஸ்டாலினுக்கு தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும்.

இழப்பீட்டைப் பெற்றுத்தர கோரிக்கை

மேலும் ஸ்டாலின் விபத்து தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

உடல்மெலிந்து தினம்தினம் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மகனுக்கு உதவக்கோரி கண்ணீர் வடித்த பெற்றோரின் நிலை, காண்போரை கலங்கச் செய்தது. கோமா இளைஞரின் சிகிச்சைக்கும், குடும்பத்துக்கும் விரைந்து உதவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் மின் விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞர் மரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.