ETV Bharat / state

"திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது" - யுஜிசி தலைவர் ஜெகதீஸ்குமார் பாராட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 10:44 PM IST

தஞ்சையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு
தஞ்சையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு

UGC CHAIRMAN BYTE: தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காகக் கடந்த ஓராண்டாகப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுத் (University Grand Commission Chairman) தலைவர் ஜெகதீஷ்குமாரின் தலைமையில் தஞ்சாவூரில் மூன்றாவது மாநாடு இன்று(ஜன.5) நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுத்(University Grand Commission Chairman) தலைவர் ஜெகதீஷ்குமார் தலைமையில் தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஜன 5) நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். இதில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் பேசியதாவது, "தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காகக் கடந்த ஓராண்டாக முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மண்டல வாரியாக மொத்தம் 5 மண்டலங்களில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஏற்கெனவே மேற்கு மற்றும் வடக்கு மண்டலத்தில் மாநாடு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மூன்றாவதாகத் தஞ்சாவூரில் தென் மண்டல மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 200-க்கும் அதிகமான துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதைத்தான் தேசிய கல்விக் கொள்கை மூலம் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட உள்ளது. உலகளவில் கல்வித் துறை போட்டி நிறைந்ததாக உள்ளது.

எனவே உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு இணையாக நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் சிறந்த திறனைப் பெறும் வகையில் நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுத்தப்படும்" எனத்தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பான நிலையில் உள்ளது. இங்கு அண்ணா பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளன. திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் தமிழ்நாடு சிறந்து திகழ்கிறது. இதனால் இங்கு சிறந்த மனித வளம் உருவாக்கப்படுவதால் தொழில் ரீதியாகவும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் காரணமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் முன்பைவிட கேரளா, தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் விகித அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் போது, தமிழ்நாட்டின் பங்கு குறைவாக இருக்கலாம். ஆனால் பொதுவாகப் பார்க்கும் போது முன்பைவிட தமிழ்நாடு அதிகரித்தே உள்ளது" என்று கூறினார்.

இந்த மாநாட்டில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தலைவரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் டாக்டர் நிர்மல்ஜீத் சிங் கல்சி கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம், பல்கலைக்கழக முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்ட துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: பள்ளிகளில் விழிப்பணர்வு நிகழ்ச்சியால் 15 போக்சோ வழக்குகள் பதிவு - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.