ETV Bharat / state

தஞ்சை தமிழ்ப் பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு.. கன்னட மொழி பயிற்சி.. தடைகளை உடைத்த திருநங்கை தர்ஷினி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 10:59 AM IST

கல்வி மூலம் திருநங்கைகளின் சமூக மாற்றத்தைத் தேடும் திருநங்கை தர்ஷினி
கல்வி மூலம் திருநங்கைகளின் சமூக மாற்றத்தைத் தேடும் திருநங்கை தர்ஷினி

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (PhD) படிக்கும்போதே கன்னடம் மொழிப் பயிற்சியையும் பயிலும் திருநங்கை தர்ஷினியின் விடா உழைப்புக்கு அரசின் ஊக்கம் வேண்டி அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தர்ஷினி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி மூலம் திருநங்கைகளின் சமூக மாற்றத்தைத் தேடும் திருநங்கை தர்ஷினி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்கு என்று அமைக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக் கழகத்தில் மொழிப்புலம், கலைப்புலம், சுவடிப்புலம், அறிவியல் புலம், வளர்தமிழ் புலம் என பல்வேறு புலங்களின் கீழ் துறைகள் செயல்பட்டு மாணவர்கள் கல்வி பயின்றும், ஆய்வு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த திருநங்கை தர்ஷினி (40) என்பவர், கடந்த ஆண்டில் (2021-23) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்று, தேர்ச்சி பெற்று, பட்டம் பெற்றுள்ளார். இதனையடுத்து தற்போது மேல்படிப்பாக, தமிழ்ப் பல்கலைக்கழக ஒப்பிலக்கிய துறை தலைவர் முனைவர் கவிதா வழிகாட்டுதலுடன், திராவிட இலக்கியங்களில் மூன்றாம் பாலின பதிவுகள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதற்கான ஆணையினை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அவர்கள் வழங்கி, திருநங்கை தர்ஷினிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருநங்கை தர்ஷினி தற்போது தமிழ்ப் பல்கலைக்கழக ஒப்புதலுடன், கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (Central Institute Of Indian Language) 10 மாத பட்டய பயிற்சியான கன்னடம் மொழியினை கற்று வருகிறார்.

முனைவர் பட்டம் ஆய்வு மேற்கொள்ளும் தர்ஷினிக்கு பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் இளையாப்பிள்ளை, முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கூறும்போது, “திருநங்கை தர்ஷினி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் சலுகைப் பெற்று முதுகலை பட்டம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது முனைவர் பட்டம் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். திருநங்கைகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க, வயதுவரம்பு சலுகை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம். இதன் மூலம் மேலும் அவர்கள் கல்வி அறிவைப் பெற்று அங்கீகாரம் பெற்ற மனிதர்களாக வாழ்வார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து முனைவர் பட்ட ஆய்வாளர் தர்ஷினி கூறும்போது, திராவிட மொழிகளில் திருநங்கைகள் பற்றிய பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், தேசிய தகுதி தேர்வில் (National Eligiblity Test) மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோசிஃப் (Junior Research Fellowship) தேர்வில் வயது வரம்பை நீட்டித்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

மேலும் அவர் “திருநங்கைகள் என்றாலே ஏளனமாகவும், கேலியும், கிண்டலுமாக பார்க்கின்றனர். ஆனால் தற்போது திருநங்கைகள் சுயதொழில் செய்து முன்னிலைக்கு வந்துள்ளனர். எனவே அரசு சலுகைகள் வழங்கி வாய்ப்புகள் அளித்தால் திருநங்கைகள் சமூகம் நல்ல நிலையை அடையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் சிறப்பு அம்சமாக தர்ஷினி, உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு மூன்று முறை எழுதி மதிப்பெண் அடிப்படையில் சலுகை இல்லாததால், அனைவருடனும் போட்டி போடக்கூடிய நிலை ஏற்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி பயிலும் திருநங்கைகளுக்கு வயதுவரம்பு, மதிப்பெண் ஆகிய சலுகைகள் வழங்கினால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள திருநங்கைகளின் சமுதாயம் முன்னேற்றம் அடையும். மேலும் திருநங்கைகளைப் பற்றிய பதிவு, நாவல்கள், புராண பாத்திரங்கள், தெய்வ வழிபாடு அர்த்தநாரீஸ்வரர் மற்றும் கூத்தாண்டவர் கோவில் வழிபாடு ஆகியவற்றிலும் திருநங்கைகள் பற்றி நம்மால் அறிய முடியும்.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த சட்ட போராட்டம் - ஓபிஸின் அரசியல் பயணம் முடிந்ததா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.