தஞ்சாவூர்: கும்பகோண மாநகரம் உலக அரங்கில், பல்வேறு கலைகளின் பிறப்பிடமாக போற்றப்படுகிறது. குறிப்பாக, சுவாமிமலை உலோக சிலை வடிவமைப்பு, நாச்சியார்கோயில் குத்துவிளக்கு, சிக்கல்நாயகன் பேட்டை, கலம்காரி ஓவியம் என பட்டியலிடலாம்.
அந்த வகையில், பைபரின் மூலம் தத்ரூபமாக சிலைகள் வடிக்கலாம் என்பதை கும்பகோணம் சிற்பி அமுதலிங்கம் மெய்பித்து காட்டியுள்ளார். இத்தகைய சிலைகள் வடிவமைப்பதில் நல் அனுபவமும், நிபுணத்துவமும் பெற்று விளங்கி வருகிறார்.
அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் அவரது கலைதிறனையும், கைத்திறனையும் காண்போரை ஆச்சரியத்தில் முழ்கச் செய்கிறது.
சென்னை விமான நிலையத்தில் பைபரின் மூலம் காட்சிப்படுதத்ப்பட்டிருக்கும், ஐந்து சிறுவர்கள் பம்பரம் விடுதல் சிற்பம், ஐந்து இளம் பெண்கள் பல்லாங்குழி விளையாடும் சிற்பம், 14 அடி உயரம் கொண்ட மாமல்லபுரம் கோபுர சிற்பம், 11 அடி உயரம் கொண்ட நடராஜர் சிற்பம் ஆகியவற்றில் இவரது கை வண்ணம் மிளிர்வதை இன்றும் நேரடியாக காண முடியும்.
பைபரில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற சிற்பங்களை வெளிநாடுகளுக்கு கலைப்படைப்பாக வீட்டு வரவேற்பறைகளை அலங்கரிக்க செய்ய அனுப்பியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
இப்படி, விதவிதமாக எண்ணற்ற கலைப்படைப்பை கலைநயத்துடன், உருவாக்கும் திறன் படைத்த சிற்பி அமுதலிங்கத்தை சென்னை அண்ணாநகரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்த நிர்வாகிகள் அணுகி, அவர்களுக்காக பிரத்யோகமாக 20 அடி உயரம், 8 அடி அகலத்தில் நின்ற நிலையிலான விவேகானந்தர் சிலை வேண்டும் என கோரியுள்ளனர்.
இதனையடுத்து, சுமார் மூன்று மாத கடும் உழைப்பின் பலனாக அமுது தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர் இந்த அற்புதமான கலைப்படைப்பை தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
ரூபாய் 3 லட்சம் மதிப்பில் உருவான பைபர் விவேகானந்தர் சிலை இன்னும் ஒரு சில நாட்களில் கும்பகோணத்தில் இருந்து சென்னை பயணப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பழங்குடியின தகுதி...நரிக்குறவர் சமுதாய இளைஞர்களின் கல்வி,வேலைவாய்ப்பில் சமூகநீதியை பெற்றுத் தரும் - ஸ்டாலின்