கள்ள மது குடித்த இருவர் பலி.. மதுவில் சயனைடு விஷம் கண்டுபிடிப்பு... திட்டமிட்ட கொலையா?

author img

By

Published : May 22, 2023, 10:13 AM IST

Thanjavur

தஞ்சாவூரில் கள்ள சந்தையில் டாஸ்மாக் மது வாங்கி அருந்திய 2 பேர் உடலில் சயனைடு விஷம் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தகவல் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் கள்ள சந்தையில் மது குடித்த 2 பேர் பலி: உடலில் சயனைடு விஷம்... ஆட்சியர் அதிர்ச்சி தகவல்!

தஞ்சாவூர்: கீழ அலங்கம் பகுதியில் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அந்த மதுபான கடையின் எதிரில் தற்காலிக மீன் மார்கெட் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே அருகில் உள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த குப்புசாமி என்ற முதியவர் மற்றும் விவேக் (36) என்ற இளைஞர் ஆகிய இருவரும் கள்ள சந்தையில் மது வாங்கி, அங்கேயே அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மதுவை அருந்திய முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடைபெற்ற போது கள்ள சந்தையில் மது விற்ற நபர் மதுபாட்டில் பெட்டிகளை எடுத்து சென்று தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கள்ள மது குடித்த விவேக் என்ற இளைஞர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அந்த டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடந்து கள்ள மது குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களர்களிடம் பேசுகையில், "தஞ்சாவூரில் கீழ அலங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திய குப்புசாமி (68), விவேக் (36) ஆகிய 2 நபர்களும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவரும் (குப்புசாமி), மற்றொருவர் (விவேக்) மருத்துவமனையில் அட்மிட் செய்து தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். அந்த பிரேத பரிசோதனையின் அறிக்கை தடயவியல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் மெத்தில் ஆல்கஹால் இல்லை என்பதும், ஆனால் சயனைடு விஷம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இறந்த விவேக், குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தாசில்தார் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் காவல்துறையினர் மீண்டும் விசாரணையை மேற்கொள்வார்கள். சயனைடு விஷம் என்பதால் தடயவியல் அறிக்கையின் அடிப்படையில், திரும்பவும் FIR-ல் சேர்த்து விஷம் அருந்தியதால் ஏற்பட்ட தற்கொலையா, அல்லது கொலையா என தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என்றும், இதற்காக தனிப்படையை காவல் கண்காணிப்பாளர் அமைத்துள்ளனர் என்றார். மேலும் அந்த விசாரணைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றும், இந்த சம்பவம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் கள்ளத்தனமாக விற்ற டாஸ்மாக் மதுவை குடித்த இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.