ETV Bharat / state

“தீட்சிதர்களின் பிடியிலிருந்து சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை மீட்க வேண்டும்” - இ.கம்யூ கட்சி மாநில செயலாளர் வலியுறுத்தல்

author img

By

Published : Jun 30, 2023, 3:40 PM IST

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

தீட்சிதர்களின் பிடியிலிருந்து சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என, தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக கவர்னர் அறிவிப்பு வெளியிட்டார். இப்படிப்பட்ட அதிகாரத்தை ஆளுநருக்கு யார் வழங்கியது?. அரசியலமைப்புச் சட்டத்தில் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் அல்லது நீக்குகிற அதிகாரம் கவர்னருக்கு இல்லை.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

முதலமைச்சருக்கு தான் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமும், நீக்கும் அதிகாரமும் உள்ளது. கவர்னர் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட்டு, சட்ட நெருக்கடியை உருவாக்கி, அதன் மூலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உள்ள முயற்சிகளை மேற்கொள்கிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், “சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான தீட்சிதர்களுக்கு எதிரான, வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

முந்தைய அதிமுக அரசு முறையாக வழக்கை நடத்தாத காரணத்தினால் தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. முறைப்படி வழக்கை அரசு நடத்தி இருந்தால் நடராஜர் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட தீட்சிதர்கள் சுமார் 200 பேர் இருந்து கொண்டு அராஜகம் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கனகசபை மேடையில் ஏறி தரிசனம் செய்யக் கூடாது என்று போர்டு வைத்தனர்.

அதனால் பிரச்சினை ஏற்பட்டு 11 தீட்சிதர்கள் மீது தற்போது வழக்கு போடப்பட்டு உள்ளது. தீட்சிதர்களை கைது செய்வதற்கு காவல்துறை ஏன் தயக்கம் காட்டுகிறது. ஏற்கனவே அவர்கள் மேல் வழக்குகள் உள்ளது. ஆனால் எந்த வழக்கிலும் கைது செய்யவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. வழக்கு போடப்பட்ட தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும். நடராஜர் கோயிலில் எல்லோரும் அனுமதிக்கப்பட வேண்டும்.

பாகுபாடு காட்டக் கூடாது, தீட்சிதர்களின் பிடியிலிருந்து நடராஜர் ஆலயத்தை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “குறுவை சாகுபடிக்கு தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் போதாது. பயிர் கருகும் அபாயத்தில் உள்ளது. ஆகையால் மேட்டூரிலிருந்து சாகுபடிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும்.

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிம் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, நிர்வாக குழு உறுப்பினர் வீர மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் ஆட்சி அமைப்பார் பிரதமர் நரேந்திர மோடி:கொட்டும் மழையில் அண்ணாமலை உரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.