ETV Bharat / state

சிறையில் இளைஞர் மரணமடைந்த வழக்கு - சிறை காவலர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு!

author img

By

Published : Jul 25, 2023, 10:54 AM IST

சிறையில் இளைஞர் மரணமடைந்த வழக்கு
சிறையில் இளைஞர் மரணமடைந்த வழக்கு

தஞ்சை சிறையில் இளைஞர் மரணம் அடைந்த வழக்கில் சிறை காவலர்கள் மூன்று பேருக்கு முன் ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடை முன் நின்று சிகரெட் புகைத்த புகாரில் கைது செய்யப்பட்டு கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது 2019இல் வலிப்பு நோய் ஏற்பட்டு, தஞ்சை மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து விசாரித்த தஞ்சை ஜேஎம் 3 மாஜிஸ்திரேட், சிறைக் காவலர்கள் தாக்கப்பட்டதால் சரவணன் உயிரிழந்ததாக அறிக்கையளித்தார்.

இதையடுத்து கும்பகோணம் கிளை சிறை வார்டன் இளையராஜா, காவலர் வைரமூர்த்தி, உதவி ஜெயிலர் சுரேஷ்குமார் ஆகியோர் மீது கும்பகோணம் கிழக்கு போலீசார் கொலைக்குற்றம் அல்லாத மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில், தங்களுக்கு முன்ஜாமீன் கோரி 3 பேரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “முதலில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் அறிக்கைக்கு பின் தீவிரமான குற்றப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மனுதாரர்கள் குற்றம் புரிந்து உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என அரசு தரப்பின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி வாதிட்டுள்ளார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, “இறந்தவரின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்துள்ளதாகவும், வயிறு உள்ளிட்ட இடங்களில் காயமும், வயிற்றில் ஆங்காங்கே ரத்த திட்டுகள் உள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது. கடுமையான தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கையிலும், காயங்களால் ஏற்பட்ட ரத்த இழப்பு மற்றும் அதிர்ச்சியால் இறந்திருக்கலாம். தலை, மார்பு மற்றும் வயிற்றில் காயங்கள் இருந்தன.

அவரது இறப்பு இயற்கைக்கு மாறானது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். திருத்தப்பட்ட இறுதி அறிக்கையோ கடந்த ஏப்ரல் 19 2023இல்தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை கீழமை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், இறுதி அறிக்கையில் மனுதாரர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பணியில்தான் உள்ளனர்.

மனுதாரர்களை பாதுகாத்திடும் வகையில் ரகசியமாக செயல்பட்டுள்ளனர். பல்வேறு காயங்களால்தான் அவர் இறந்துள்ளார். எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்பதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்தார். மேலும், மனுதாரர்களுக்கு எதிராக கொலை குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 4 வாரத்தில் புதிதாக திருத்தப்பட்ட இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மாஜிஸ்திரேட் அறிக்கையின்படி உரிய துறை ரீதியான நடவடிக்கையை சிறைத்துறை டிஜிபி மேற்கொள்ள வேண்டும். மாஜிஸ்திரேட் அறிக்கையின்படி மனுதாரர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காவல் துறையினர் அதிகாரிகள் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கின் குற்றப்பிரிவுகளை மாற்றம் செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் உள்ள பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.