ETV Bharat / state

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தஞ்சையில் கிருஷ்ண தரிசன கண்காட்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 12:58 PM IST

Krishna Jayanti Exhibition
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ண தரிசன கண்காட்சி

Thanjavur Krishna Jayanti Exhibition: தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ண தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சையில் கிருஷ்ண தரிசன கண்காட்சி

தஞ்சாவூர்: நம் தமிழ் சமய மரபில், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகளவில் பண்டிகைகள் உள்ளன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என தனித்தனி சிறப்புப் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என தனித்தனி சிறப்புகளும் உண்டு. ஆனால், எத்தனை பண்டிகை இருந்தாலும், குழந்தைகள் குதூகலகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது.

குறிப்பாக தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள, எல்லா மொழி பேசுபவர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக கிருஷ்ண ஜெயந்தி திகழ்கிறது. மேலும் இது குழந்தைகளுக்கான பண்டிகையாக கருதப்படுகிறது. அதற்காக கிருஷ்ண ஜெயந்தி அன்று தயாரிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்துமே, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளாவே இருக்கும்.

அந்த வரிசையில் தமிழ்நாட்டில் சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முறுக்கு, வெண்ணெய், பால் திரட்டு, நாட்டு சர்க்கரை வடை போன்ற பிரசாதங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், நாம் அனைவரும் நமது குழந்தையை பொதுவாகவே கண்ணா என்றே அழைப்போம், அந்த பெயர் கிருஷ்ணனுக்கு உரியதாக உள்ளது. ஆகையால் தான், கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைகளை கிருஷ்ணனாகவே பாவிக்கின்றோம்.

ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு மயில் கிரீடம் வைத்து, புல்லாங்குழல் கொடுத்து, கிருஷ்ணனாக அலங்கரித்து மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தை வைபவமாகக் கொண்டாடுகிற விழாவாகும். அதாவது, ஆவணி மாதத்தில் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவை தென்னிந்தியாவில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று பலவித பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாலை நேரத்தில், சிறப்பு வழிபாடு நடைபெறும். பல இடங்களில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல், கோ பூஜை என கோலாகலமான விழாகளுடன் நடைபெறும்.

இந்நிகழ்வு, கிருஷ்ணன் கோயில்களில் மட்டுமல்லாது, பெருமாள் கோயில்களிலும் விசேஷ திருமஞ்சன அலங்காரங்கள், வீதி உலா ஆகியவை நடைபெறும். குறிப்பாக கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி எனலாம். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்று அழைக்கிறார்கள். அன்று மட்டும் குருவாயூர் கோயிலுக்கு பல லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகை தருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்துக்களின் முக்கியப் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில், ஆலிலை கிருஷ்ணர், வெண்ணெய் தாழி உற்சவ கிருஷ்ணர், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர் மற்றும் ஓவியத்தால் வரையப்பட்ட கிருஷ்ணர், மகாபலிபுரம் கற்சிலை கிருஷ்ணர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த கண்காட்சி கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு ரூ.100 முதல் துவங்கி ரூ.3 லட்சம் வரையிலான பொருட்கள் விற்பனைக்காகவும், கண்காட்சிக்காவும் வைக்கப்பட்டுள்ளன. தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இந்த கண்காட்சியை பார்வையிட்டும், தங்கள் மனதிற்கு பிடித்த கிருஷ்ணரின் உருவ சிலைகள், கிருஷ்ணரின் புகைப்படங்கள் மற்றும் பூஜை பொருட்களை வாங்கியும் செல்கின்றனர்.

இதையும் படிங்க: Aditya-L1: சூரியனையும் தொட்டுவிடலாம்.. ஆதவனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம்! இஸ்ரோ ரெடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.