தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதூர் கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக அல்லாவுக்கு விழா எடுத்து அந்த ஊரில் உள்ள இந்து மக்கள் கொண்டாடிவருகின்றனர். இங்கு ஒரு இஸ்லாமிய குடும்பம் கூட வசிக்கவில்லை. இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று விழா கொண்டாடப்பட்டுவருகிறது.
அந்தவகையில், இந்தாண்டு மொகரம் பண்டிகையையொட்டி அல்லா சாமி என்றழைக்கப்படும் 'உள்ளங்கை' உருவத்தை வெளியே எடுத்து, அதற்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபட்டனர். தொடர்ந்து, இரவு ஊரின் மையத்தில் உள்ள அல்லா கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. அப்போது உள்ளங்கை திருவுருவத்தை வீதியுலாவாக முக்கிய வீதிகளில் எடுத்துச் சென்றனர்.
அப்போது, பெண்கள் வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர். மேலும், அக்கோயில் முன் தீமிதி விழா நடந்தது. அதில், ஏராளமானோர் தங்கள் வேண்டுதல் நிறைவேற தீமிதித்து அல்லாவை வழிபட்டனர்.