ETV Bharat / state

முதலமைச்சரை ராஜினாமா செய்ய எழும் குரல்கள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் நச் பதில்!

author img

By

Published : May 17, 2023, 4:23 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த மா சுப்பிரமணியன்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த மா சுப்பிரமணியன்

கள்ளச்சாராய விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மா சுப்பிரமணியன்

தஞ்சாவூர்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம், கபிதஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு, ஜெயலலிதா, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆட்சிக் காலத்திலும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருதியே இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது.

மெத்தனால், எத்தனால் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மது தயார் செய்யப்படும் எத்தனால் விலை அதிகம் என்பதாலும், மெத்தனால் விலை குறைவு என்பதாலும் அதனைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை 10 மில்லி அளவு பயன்படுத்தினாலேயே கண் பாதிப்பு நரம்பு மண்டலப் பாதிப்பு ஏற்படும். அதுவே 30, 40 மில்லி பயன்படுத்தினால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறித்த கேள்விக்கு, “இப்படி ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், 1992 மகாமக நீராடாலில் உயிரிழந்தவர்களில் தொடங்கி, கோடநாடு கொலை, தற்கொலை வழக்கு வரை எத்தனை முறை இவர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, பொம்மை முதலமைச்சர் எனக் குறிப்பிடப்படுவது குறித்த கேள்விக்கு, “கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களில் உள்ள இடர்பாடு காலகட்டங்களில், மறுநாள்கூட நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் கூறியதில்லை. அப்படி எதுவும் செய்யாமல் 10 ஆண்டுகள் காலம் தூங்கி கொண்டே இருந்தவர் தான், எடப்பாடி கே பழனிசாமி.

அவர் பொம்மை முதலமைச்சராக இல்லை. இத்தகைய உயிரிழப்பு ஏற்பட்டவுன் உடனடியாக சம்பவயிடத்திற்கே நேரில் வந்து பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்குரிய நிவாரணம் வழங்கி, நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களை பணியிட மாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

’’மாநிலம் முழுவதும் 4ஆயிரத்து 308 செவிலிய உதவியாளர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1021 மருத்துவர்களை நியமிக்க நடந்த தேர்வில் 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருந்தனர், இவ்வாண்டு மேலும் 4 ஆயிரம் செவிலியர்களை நியமனம் செய்ய உள்ளோம், 900 மருந்தாளுனர் பணியிட நியமனங்களுக்கான தேர்வினை 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஒரு மாத காலத்திற்குள் வெளியாகும். அதன்பிறகு பணி நியமனங்கள் நடைபெறும்

இது தவிர அந்த அந்த மாவட்ட ஆட்சியர்களே சுமார் 2 ஆயிரம் எண்ணிக்கையிலான தற்காலிக செவிலியர், மருந்தாளுனர்களை நியமனம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வருவாய் மாவட்டங்கள் 38 இருந்தபோதும், சுகாதார மாவட்டங்கள் 45 உள்ளது. கும்பகோணத்தை 46ஆவது சுகாதார மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை விடுப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவைப் பெற்று, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், கடலூர் மற்றும் திருவள்ளுர் ஆகிய 3 மாவட்டங்களில் 3 சுகாதார மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும்” என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கள்ளச் சாராய பலி எண்ணிக்கை அதிகரிப்பு: பாமக ஜி.கே.மணி வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.