ETV Bharat / state

தஞ்சாவூரில் களைகட்டிய கிராமத்து பொங்கல்... பாரம்பரிய உடை அணிந்து வெளிநாட்டினர் உற்சாகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 1:58 PM IST

Pongal Celebration
தஞ்சாவூரில் களைகட்டிய கிராமத்து பொங்கல்

Pongal Celebration : தைப்பொங்கலை முன்னிட்டு தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் கிராமத்து பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூரில் களைகட்டிய கிராமத்து பொங்கல்

தஞ்சாவூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த நிலையில் தை மாதம் முதல்நாள் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (ஜன. 15) பொங்கல் பண்டிகை பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் தஞ்சாவூர் அடுத்த நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டினர் கொண்டாடிய கிராமத்து பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் பிரான்ஸ், நெதர்லாந்து, போலந்து, இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தஞ்சாவூருக்கு வருகை தந்த 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாஞ்சிக்கோட்டை கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

முன்னதாக தாரை தப்பட்டை, புலியாட்டம், கொம்பு முழங்க மாட்டு வண்டியில் வெளிநாட்டினர் பாரம்பரிய வேட்டி சேலையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு நடைபெற்ற கும்மியாட்டம், புலியாட்டம், கோலாட்டம், பானை உடைத்தல், கயிறு இழுத்தல், இளவட்ட கல் தூக்குதல் ஆகிய நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.

மேலும் கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மள்ளர் கலம், நவ தெய்வங்கள் சாமி ஆட்டம் ஆகியவற்றையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு வியந்து ரசித்தனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப், மேலும் அப்பகுதி கிராம பொதுமக்கள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் வெளிநாட்டினரும் பங்கேற்று நடனமாடி உற்சாகமடைந்தனர். அங்கு அவர்களுக்கு சக்கரை பொங்கல், சுண்டல், வாழைப்பழம், கரும்பு மற்றும் இளநீர் வழங்கப்பட்டது. அதனையும் ருசித்து கொண்டே நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தங்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது என்றும், மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தேனி வீரர் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.