தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படுவதை ஒட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
நவராத்திரி விழாவின் நிறைவாக, நாளை அக்-23ம் தேதி திங்கட்கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ளது, இதைத்தொடர்ந்து 24ம் தேதி செவ்வாய்கிழமை விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது, இதனையடுத்து பூஜை பொருள்கள் வாங்க கடை வீதிகள் மார்க்கெட் போன்ற இடங்களில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.
பொதுவாகப் பண்டிகை காலங்கள் முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்படும். இந்நிலையில் ஆயுத பூஜைக்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கும்பகோணத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்த விலையை விட தற்போது 3 முதல் 4 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
சில்லறை வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை பலரும் பூக்களை வாங்கி சென்றனர்.பூக்களின் தேவை அதிகரிப்பால் கும்பகோணம் பூக்கடைத்தெரு, கும்பேஸ்வரன் வடக்கு வீதி, பொற்றாமரை வடக்கு வீதி ஆகியவற்றில் உள்ள மலர் வணிகம் நிறுவனங்களில், ஆப்பிள் ரோஸ், பன்னீர் ரோஸ், ஜவ்வந்தி, ஆகியவை குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ள பூக்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
விலைப்பட்டியல்: ஜவ்வந்தி கிலோ 200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ 200 ரூபாய்க்கும், ஆப்பிள் ரோஸ் கிலோ 300 ரூபாய்க்கும், முல்லை பூ மற்றும் மல்லிகை பூ கிலோ 1,500 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ ரூபாய் 600க்கும், தாமரைப்பூ ஒன்று 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை சற்று அதிகமாக இருந்த போதும், விழாவினை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது தேவை அளவை குறைத்துக் கொண்டு ஏராளமானோர் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இதனால் கும்பகோணத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் காலை முதல் களைகட்டி வருகிறது.
இதையும் படிங்க: 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் களமிறங்கும் பாகிஸ்தான்.. ஷாக் கொடுக்குமா ஆப்கானிஸ்தான்?