ETV Bharat / state

நகை சீட்டு மோசடியில் சிக்கிய பிரணவ் ஜுவல்லர்ஸ்.. போலீஸ் பட்டாளம் குவிப்பு.. கும்பகோணத்தில் நடப்பது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 11:05 PM IST

Pranav Jewellery shop: கும்பகோணம் பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக கடை நிர்வாகிகள் முன்னிலையில், பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி தலைமையிலான பத்து பேர் கொண்டு குழு சோதனை நடத்தினர்.

நகை சீட்டு மோசடியில் சிக்கிய பிரணவ் ஜுவல்லர்ஸ்
நகை சீட்டு மோசடியில் சிக்கிய பிரணவ் ஜுவல்லர்ஸ்

கும்பகோணம் பிரணவ் ஜுவல்லரி

தஞ்சாவூர்: தமிழகத்தில் கடந்த சில மாதங்களில், தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரங்கள் செய்து, அதன் வாயிலாக திருச்சி, சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், ஈரோடு, புதுச்சேரி, கும்பகோணம் என எட்டு கிளைகளுடன் தமிழகத்தில் விஸ்வரூப வளர்ச்சி கண்ட நகைக்கடை தான் பிரணவ் ஜுவல்லர்ஸ்.

சேதாரம் இல்லை என பெரிய அளவில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து, அவர்களை மாதாந்திர நகை சீட்டில் உறுப்பினர்களாக சேர்த்தும், பலரிடம் நிரந்தர முதலீடாக பெற்றும் குறைந்த காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்நிறுவனத்தின் ஓர், இரண்டு கிளைகள் திடீரென மூடப்பட்டது.

இந்த தகவல் பெரிய அளவில் வெளியே கசியும் முன்னர், நேற்று முன்தினம் காலை முதல் அனைத்து கிளைகளிலும் பராமரிப்பு பணி, ஒரு சில நாட்களில் கடை திறக்கப்படும், சில கிளைகளில் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என்று, விதவிதமாக அறிவிப்புகளை ஒட்டி, வாடிக்கையாளர்களை திசை திருப்பினர்.

இந்நிறுவனம் மாதாந்திர நகை சீட்டு மற்றும் வைப்புத்தொகை வாயிலாக பல நூறு கோடி அளவிற்கு தமிழகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே, தஞ்சை முக்கிய சாலையான நாகேஸ்வரன் வடக்கு வீதியில் செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லர்ஸ் கிளை நேற்று முன்தினம் காலை முதல் திறக்கப்படவில்லை.

பல வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து பூட்டியிருப்பது கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர். அதன் பின்னர் தான், அனைத்து கிளைகளும் ஒட்டுமொத்தமாக பூட்டப்பட்ட தகவல் கசிந்து, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கும்பகோணம் கிளையில், மாதாந்திர நகை சீட்டு மற்றும் வைப்பு நிதியாக அளித்த சுமார் 60-க்கும் மேற்பட்டோர், இந்நிறுவனத்தின் மோசடியால், ஏமாற்றப்பட்டுள்ளதாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உத்தரவின்பேரில், இவ்வழக்குகளை தற்போது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கையாளுகின்றனர்.

முதற்கட்டமாக, இன்று மாலை (அக்.19) 6 மணி அளவில், கும்பகோணம் கிளையினை கடை நிர்வாகிகள் முன்னிலையில், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில், பத்து பேர் கொண்ட குழுவினர் கடையை திறந்து சோதனை செய்தனர்.

அதில், அங்கு தங்க நகைகள் ஏதும் இருக்கின்றதா? அவை அசல் தங்க நகைகள் தானா? இல்லை எனில் கவரிங் நகைகளா? அதன் எடை, மதிப்பு, ஆகியவற்றையும், கடையில் உள்ள கணப்பொறி, குறிப்பேடுகள், பேரேடுகள் ரொக்க தொகை எதுவும் உள்ளதா? என்பது உள்ளிட்ட பலவிதமான ஆவணங்களையும், தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து சோதனை செய்தனர்.

போலீசாரின் இந்த திடீர் சோதனை குறித்து தகவல் அறிந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல கடையின் முன்பு குவியத் தொடங்கினர். இதனை தொடர்ந்து, கும்பகோணம் டி.எஸ்.பி கீர்த்திவாசன் தலைமையில் கும்பகோணம் உட்கோட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, சாதாரண உடையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கு சாதாராண உடையில் இருந்த போலீசார், பாதிக்கப்பட்ட அனைவரும் தஞ்சை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் உரிய ஆவண நகல்களுடன் புகார் கொடுத்து தீர்வு காணுங்கள் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் அப்பகுதி 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. மேலும் சில மணி நேர சோதனைக்கு பிறகு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் எடுத்துச் செல்வார்கள் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.