ETV Bharat / state

கன்னியாகுமரியில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 11:07 AM IST

Kanyakumari crime: கன்னியாகுமரியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரவுடி செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகரன் பிரசாத் ரவுடிகளை பிடிக்க தனிப்படைகளை அமைத்து மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகளின் விபரங்களை சேகரித்து, அவர்களை பிடிக்க தீவிர தேடுதல்
வேட்டை நடத்தினார்.

இதன் பலனாக கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் நீதிமன்ற பிணை பெற்று பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி வெள்ளை செந்தில், செம்பொண்கரை காலனியைச் சேர்ந்த நாகராஜன், வனத்துறை அலுவலர் ஆறுமுகம் மற்றும் அவர் மனைவி யோகேஸ்வரி ஆகியோரை சுட்டுக் கொலை செய்த தாத்தா செந்தில் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி அருகே உள்ள நாச்சியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவர், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த லிங்கத்தை, 1996ஆம் ஆண்டு ஒரு கும்பல் அத்துமீறி சிறைக்குள் புகுந்து வெட்டி கொலை செய்தது.

அவரது தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் வைத்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் 36 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், முன் விரோதம் காரணமாக லிங்கம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பலரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

அவரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது செல்வம் தலைமறைவானார். பின்னர், பல்வேறு பகுதிகளில் தேடியும் அவர் சிக்கவில்லை. இதனால், கடந்த 27 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், செல்வம் சென்னையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு செல்வத்தை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், அவரை வடசேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், வடசேரி காவல் நிலையத்தில் செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்குப் பிறகு செல்வத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வாறு ரவுடி லிங்கத்தை சிறைக்குள் புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருநங்கை படுகொலை செய்யபட்ட வழக்கு; செல்போன் மூலம் இருவர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.