தஞ்சாவூரில் அமமுக பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரெங்கசாமி மகன் வினோபாரத் திருமணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார்.
திருமண விழாவில் பேசிய தினகரன், "தேர்தல் முடிவுக்குப் பிறகு தஞ்சை மண்ணுக்கு வந்து மீண்டும் எழுச்சியோடு பொருளாளரின் இல்ல நிகழ்ச்சியின் மூலம் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். பலவிதமான சோதனைகள் மூலம் நிச்சயம் நம்மை அரசியல் ரீதியாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்தவர்கள் இப்போது வேண்டுமானால் அற்ப சந்தோஷம் அடையலாம். நாங்கள் தொடர்ந்து எழுச்சியோடு செயல்படுவதோடு தமிழ்நாட்டின் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற நினைப்புடன் செயல்படுவோம்" என்றார்.
இந்த திருமண விழாவில், தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்கவில்லை. தினகரன் எப்போது தஞ்சை வந்தாலும் தங்க தமிழ்ச்செல்வன் உடன் வருவது வழக்கம். ஆனால், தேர்தல் தோல்வியால், இருவருக்குமிடையே அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது.