தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் 2006ஆம் ஆண்டு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 110 விதியின்கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் 14 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகப் பணியாளராக 113 கெளரவ பேராசிரியர்களும், 17 பணியாளர்களும் பணிபுரிந்துவருகின்றனர். இதனிடையே, அக்கல்லுரியில் பணிபுரிந்துவரும் அகிலா, கலைச்செல்வி, அபிராமி ஆகிய மூன்று பேரை பணிநீக்கம் செய்து திடீரென்று நேற்று அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் மூன்று பேரை பணியாற்ற ஆணை பிறப்பித்துள்ளது.
இதனையறிந்த பிற பேராசிரியர்கள் இதனைக் கண்டித்து கல்லூரி வாசல் முன்பு இரண்டாவது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், பேராசிரியர்களுக்கு ஆதரவாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால் கல்லூரிக்குள் பதற்றமான சூழல் நிலவியதால் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரியில் தொடர் போராட்டத்தைத் தவிர்க்க கல்லூரி நிர்வாகம் வருகின்ற திங்கள்கிழமை வரை அனைத்து வகுப்புகளுக்கு விடுமுறை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும். தற்காலிக பேராசிரியராகப் பணிபுரியும் அனைத்து பேராசிரியரும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும் எனக் கல்லூரி பேராசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க - தலிபான் ஒப்பந்தம், இந்தியாவுக்கு அழைப்பு