ETV Bharat / state

முதலமைச்சரின் விழா... கட் ஆன கரன்ட்.. கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்ட 100 நாள் பணியாளர்கள் - எங்கே?

author img

By

Published : Jun 28, 2023, 8:02 PM IST

Etv Bharat துணை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்து வைத்து ஸ்டாலின்
Etv Bharat துணை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்து வைத்து ஸ்டாலின்

சேமிப்புக் கிடங்குடன் கூடிய துணை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவிற்கு பொதுமக்கள் யாரும் வராத நிலையில் நூறு நாள் வேலைக்குச் சென்ற பெண்களை அழைத்து வந்துள்ளனர்.

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ஆரியப்படைவீடு ஊராட்சிக்குட்பட்ட தென்னூர் கிராமத்தில், ரூபாய் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில், 500 மெட்ரிக் டன் அளவிலான சேமிப்புக் கிடங்குடன் கூடிய (துணை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்) புதிய கட்டடத்தை இன்று முற்பகல் சென்னையில் இருந்தவாறு காணொலி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனையொட்டி, இன்று சம்மந்தப்பட்ட தென்னூர் சேமிப்புக் கிடங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் காணொலியை நேரில் காணும் வகையில், பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், திமுக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி செழியன், கும்பகோண கோட்டாட்சியர் பூர்ணிமா, ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மாலினி உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென மின் தடை ஏற்பட்டதால், பெரிய திரையில் காட்சி தடைப்பட்டது. இருப்பினும் நிலைமையை மடிக்கணினி உதவியோடு, சமாளித்து காணொலி காட்சியைத் தொடர்ந்து பார்த்து, முதலமைச்சர் தொடங்கி வைத்த பிறகு, தென்னூர் சேமிப்புக் கிடங்கில், குத்து விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு முன்கூட்டியே முறையாக தகவல் சென்றடையாததால், அவர்கள் யாரும் வராத நிலையில், அந்தப் பகுதியில் நூறு நாள் பணி செய்து கொண்டிருந்த பெண்கள் திடீர் விருந்தினர்களாக அழைத்து வரப்பட்டனர். அவர்களை இருக்கைகளில் அமர வைத்து தேநீர் வழங்கி கவனித்து சமாளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விழா தொடக்க விழா நிகழ்வு தென்னூரில் நிறைவு பெற்ற பிறகு மின் தடை நீங்கியதைத் தொடர்ந்து மீண்டும் பெரிய திரையில் காணொலி காட்சி ஒலிபரப்பப்பட்டது. ஆனால், இதனைக் கண்டு ரசிக்கத் தான் யாரும் ஆர்வம் காட்டாமல் வீட்டிற்கு புறப்படுவதில் குறியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சிக்கும், மின்சாரத்திற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாக தான் உள்ளது என்பதை இந்த நிகழ்வும் மெய்ப்பிக்கிறது என திமுக உடன்பிறப்புகள் பலரும் தங்களுக்குள் சத்தம் வெளியே தெரியாதபடி, முனுமுனுத்துக் கொண்டனர் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இதையும் படிங்க: ADMK General Meeting: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.