கும்பகோணம் அருகே காதல் திருமணம் முடிந்து ஐந்து நாட்களில் இளம் தம்பதி ஓட ஓட விரட்டி கொலை !

author img

By

Published : Jun 14, 2022, 9:43 AM IST

Updated : Jun 14, 2022, 10:22 AM IST

படுகொலை

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து 5 நாட்களே ஆன இளம் தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இருவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

தஞ்சை: கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியைச் சேர்ந்த சேகர்-தேன்மொழி தம்பதி (பட்டியல் இனம்) இவர்களுக்கு சக்திவேல் சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா(23) என்ற மகளும் உள்ளனர். தந்தை சேகர் மற்றும் மூத்த மகன் சக்திவேல் ஆகியோர் கொத்தனார் வேலை பார்ப்பவர்கள். மற்ற இரு மகன்களும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகின்றனர். மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிய நிலையில், ஒரே மகளான சரண்யா நர்சிங் படித்து விட்டு சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையே, சரண்யாவின் தாயார் தேன்மொழிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அதே மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்னத்தெருவைச் சேர்ந்த மோகன்(26) என்பவரின் தாயாரின் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, சரண்யா-மோகன் ஆகியோருக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவரின் தாயார்களும், சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பிய போதும், காதலர்கள் இருவர் மட்டும் தொலைபேசி வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு பேசியபடியே தங்களது காதலை வளர்த்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் (ஜூன்9) சரண்யாவும், மோகனும் சென்னையில் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான காதல் ஜோடி, நேற்று (ஜூன்13) காலை சோழபுரம் துலுக்கவேலியில் உள்ள சரண்யா வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நண்பகல் உணவிற்கு பிறகு, மீண்டும் சென்னைக்கு செல்ல இருந்தனர்.

பின்னர் வீட்டுக்கு வெளியே வந்த காதல் ஜோடியை அண்ணன் சக்திவேலும் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் இணைந்து ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா டிஎஸ்பிக்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றிவேந்தன் ஆகியோர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர், இப்படுகொலைகள் குடும்ப பிரச்சனை காரணமாக நடந்துள்ளது. படுகொலை குறித்து நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதால் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுமண தம்பதியினர் கொடூரமாக வெட்டி கொலை

இதையும் படிங்க: 'மகனை போலீசார் அடித்து கொன்றுள்ளனர்' - ராஜசேகரின் தாய் பேட்டி!

Last Updated :Jun 14, 2022, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.