ETV Bharat / state

காதல் திருமணம் செய்த மகளை வெட்டிக்கொன்ற தந்தை!

author img

By

Published : Jul 1, 2021, 10:22 AM IST

பெற்றோரை எதிர்த்து திருமணம் - மகள் கொலை
பெற்றோரை எதிர்த்து திருமணம் - மகள் கொலை

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த மகளை ஆறு மாதங்களுக்குப் பிறகு தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி: ஊத்துமலை அருகே உள்ள ஆர்.சி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஷாலோம் ஷீபா (19). அதே ஊரைச் சேர்ந்தவர் முத்துராஜ் (22) கூலித்தொழிலாளி. முத்துராஜ், ஷீபா இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு ஷீபா வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வீட்டிற்குத் தெரியாமல் இருவரும் திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து, ஒரே ஊரில் வசித்தாலும் பெற்றோரின் கோபத்தால் தனது தாய் வீட்டிற்கு ஷீபா செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் (ஜூன்.29) கோயில் திருவிழாவிற்கு சென்ற முத்துராஜ் - ஷீபா இருவரும் அதிகாலை சாமக்கொடை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கோயில் சென்று திரும்பும் வழியில் தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறி ஷீபா சென்றுள்ளார்.

காதல் திருமணம் செய்ததால் கோபத்தில் இருந்த மாரிமுத்து, மகளைப் பார்த்ததும் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே தனது மகளை மாரிமுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஷீபாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஷீபா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மாரிமுத்துவை கைது செய்து, ஊத்துமலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணம் வேண்டாம்... இளைஞர் தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.