ETV Bharat / state

தென்காசி தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

author img

By

Published : Mar 26, 2021, 11:00 AM IST

Tenkasi  DISTRICT WATCH
தென்காசி தொகுதிகள் வலம்

கடந்த 2019 ஆம் ஆண்டு தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, தனது ஒரு வயதைப் பூர்த்தி செய்திருக்கும் மாவட்டங்களில் ஒன்று தென்காசி. சமீபத்தில் திருநெல்வேலியில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவானது. வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சி விளையாடும் குற்றால மலையையும், சிவனின் ரூப வடிவமான நடராஜர் திரிபுர தாண்டவமாடும் சித்திரச் சபை தன்னகத்தே கொண்டது இம்மாவட்டம். வெள்ளையர்களுக்கு வரி கட்ட மறுத்து, வீர சுதந்திர முழக்கமிட்ட பூலித்தேவன், அவனது மறத்தளபதிகள் ஒண்டிவீரன், வெண்ணி காலாடி தொடங்கி இந்திய சுதந்திரத்திற்காக கலெக்டரைக் களபலிக் கொண்ட வாஞ்சிநாதன் வரை வீரத் தியாகிகள் பலரைத் தந்த மாவட்டம். நெல்லையைத் தாமிரபரணி தத்தெடுத்தது என்றால், குற்றாலத்தில் பிறந்தோடும் சிற்றாறும், அநுமன் நதியும், தென்காசியை வளமாக்குகின்றன. அவற்றிக்குத் துணை செய்கின்றன குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, ராமா நதிகளுடன் 800 ஊரணிகள். இதன் காரணமாக, மாவட்டத்தின் 65 விழுக்காட்டினரின் பிரதான தொழில் விவசாயமே. சொல்லிக்கொள்ளும் படியாக நெசவும் உண்டு. இப்புதிய மாவட்டத்தின் வடக்கே விருதுநகர், தெற்கில் திருநெல்வேலி, கிழக்கில் தூத்துக்குடி, மேற்கே கேரளாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வாசல்:

மேற்குத் தொடர்ச்சி மலையின் குளிர் மஞ்சுகள் (மேகம்) தவழ்ந்தோடும் தென்காசியில், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளைக் கொண்டுள்ளது.

தொகுதிகள் உலா:

சங்கரன்கோவில் (தனி): அரியும், அரணும் இணைந்திருக்கும் 'சங்கரநாராயணர்' கோயில் இத்தொகுதியின் அடையாளங்களில் ஒன்று. அமைச்சர்களின் தொகுதி எனச் சொல்லும் அளவிற்கு இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்துள்ளனர். மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் இல்லாத தொகுதி சங்கரன்கோயில்.

மானாவாரி விவாசயமே பிரதானம். பூக்கள், எலுமிச்சை, போன்ற பயிர்கள் விளைகின்றன. குறிப்பிட்ட விழுக்காடு மக்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நூல் விலை ஏற்றம், ஜிஎஸ்டி வரியால் நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் ஆடைகள் விற்பனை செய்ய தொகுதியில் ஒரு ஜவுளிப்பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

பாசன வளம் இல்லாத வறண்ட இந்தத் தொகுதியில் தொழிற்பேட்டை தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்று வரை நிறைவேறவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அடிக்கல் நாட்டிய சிப்காட் பணிகள் இன்று வரை தொடங்கப்பட வில்லை. தொகுதியின் நீண்டகால பிரச்னை குடிநீர் தட்டுப்பாடு.

மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டாலும், பல இடங்களில் வாரத்திற்கு, மாதத்திற்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் உபரியாக வெளியேறும் தாமிரபரணி தண்ணீரை ராதாபுரம் தொகுதிக்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்வதைப் போல சங்கரன்கோவில் தொகுதிக்கும் கொண்டுவர வேண்டும், தொகுதியில் ஆட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்ற அத்தியாவசிய கோரிக்கைகள் இன்னும் ஆட்சியாளர்களின் செவிகளைச் சென்று சேரவில்லை என்பது தொகுதி மக்களின் சோகமே.

வாசுதேவநல்லூர் (தனி): மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் தொகுதி இது. விவசாயமே பிரதான தொழில். இத்தொகுதிக்குட்பட்ட புளியங்குடி பகுதியில் அதிகளவில் எலுமிச்சையும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் பெரிய எலுமிச்சை சந்தையும் இங்குள்ளது. இத்தொகுதியின் நீண்ட காலப் பிரச்னை செண்பகவள்ளி அணை.

இந்த அணையினை நம்பி, 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பயிரிடப்படுகின்றன. சிவகிரி செண்பகவள்ளி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தந்து வந்தத் தடுப்புச் சுவர் உடைந்து விட்டது. தற்போது இது இருமாநில பிரச்னையாக நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் நீடித்துவருகிறது.

தென்காசி தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இங்கு கரும்பு அதிகம் விளைகிறது. இங்குள்ள தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையினை பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துவருகின்றனர்.

புளியங்குடியில் எலுமிச்சை அதிகம் விளையும் காலங்களில் விலை விழ்ச்சியைக் கட்டுப்படுத்த, குளிர் பதனக்கிடங்கு அமைக்க வேண்டும் என, எலுமிச்சை விவசாயிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர். சிவகிரி தாலுகா மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், விருதுநகருக்கு செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடையநல்லூர்: மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் மற்றொரு தொகுதி. பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில், கடையநல்லூரிலுள்ள பழமையான பள்ளிவாசல்கள் தொகுதியின் ஆன்மீக அடையாளங்கள். அடவிநயினார், கருப்பாநதி அணைகளின் மூலம் விவசாயம் செழித்திருக்கிறது.

தென்னை அதிகம் விளைவதால் தென்னை நார்சார்ந்த தொழில்கள் நடைபெறுகின்றன. தேங்காயை மதிப்புக் கூட்டும் தொழிற்கூடங்கள் தேவை என்பது தொகுதி மக்களின் கோரிக்கை. விவசாயம் சார்ந்த பகுதி என்பதால், விளைப் பொருட்களை சேமித்து வைக்கப் போதிய வசதிகள் இல்லை. விளை பொருட்களைப் பாதுகாத்து விற்பனை செய்ய குளிர் பதனக்கிடங்கு அமைத்துத் தரவேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாகவுள்ளது.

தொகுதியில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல், படித்த இளைஞர்கள் வெளி மாநில, மாவட்டங்களுக்குப் புலம் பெயர்ந்து செல்கின்றனர். இதனால் தொகுயில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. கேரள - தமிழ்நாடு எல்லையான புளியரை இந்தத் தொகுதியில் தான் உள்ளது.

இங்குள்ள சோதனைச் சாவடி பெயரளவில் மட்டுமே இயங்குவதாகவும், கேரளாவிலிருந்து இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் தமிழ்நாட்டு எல்லைக்குள் கொட்டிச் செல்கின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனைச் சாவடியை நவீனப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

தென்காசி: புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில், குற்றாலம் நீர்வீழ்ச்சிகள் தொகுதியின் சிறப்பு அடையாளங்கள். விவசாயமே பிரதானத் தொழில். பெண்கள் அதிகளவில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றாலத்தை மேம்படுத்தி அதனை சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவில்லை.

தொகுதியில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய தொழிற்சாலைகள் இல்லை. தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும் என்றும் தொகுதிவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர். வியாபாரிகள் அதிகம் உள்ள சுரண்டை பகுதியில் தொழில் நகரம் உருவாக்க வேண்டும். பெண்கள் அதிகளவில் பீடிசுற்றும் வேலையில் ஈடுபடுவதால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

அவர்களுக்கு மாற்று வேலைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கு மலைத்தொடரின் அடிவாரத்தில் இருந்தாலும், தொகுதியில் தண்ணீ்ர் தட்டுபாடு நிலவி வருகிறது. அணைகளில் இருந்து எடுத்து வரப்படும் தண்ணீர் முறைப்படுத்தப்படாதது காரணமாக, பல பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

ஆலங்குளம்: தென்காசி மாவட்டத்தில் இருந்தாலும் ஆலங்குளம் தொகுதி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வருகிறது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியின் முக்கியத் தொழில் விவசாயம், பீடி சுற்றுதல், அரசி ஆலைகள், காய்கறி வியாபாரம். தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று தென்காசி, திருநெல்வேலி சாலை விரைவில் சீரமைக்கப்பட வேண்டும். தொகுதியில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும், குடிநீர் ஆதாரங்களை உருவாக்க வேண்டும், கல்வி நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்பன நீண்ட கால கோரிக்கைகளாகும். பெண்கள் அதிகளவில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு காசநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றது. அவர்களுக்கு வழங்கப்படும் கூலியும் குறைவாகவே உள்ளது. பீடி சுற்றும் பெண்களுக்கான கூலியை முறைப்படுத்த வேண்டும். முக்கூடலில் செயலற்றுக்கிடக்கும் பீடி சுற்றும் தொழிலாளர்கள் நல மருத்துவமனை சீரமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்; பீடி சுற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தொட்டியன்குளத்திற்குத் தண்ணீர் கொண்டு வரும் ஆலங்குளம் கால்வாயைத் தூர்வார வேண்டும் என்பதும் தொகுதிவாசிகளின் நீண்டகால கோரிக்கையாகும்.

கடனாநதி, ராமாநதி அணைகள் தூர்வாரப்பட வேண்டும். கடையம் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். வட்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் இங்கு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. போதிய செவிலியர்கள், மருத்துவர்கள் நியமித்து, மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.

களநிலவரம்:

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டம் என்பதால், திருநெல்வேலியுடன் இருந்தபோது தொடர்ந்த கோரிக்கைகளுடன் புதிய மாவட்டத்திற்கான அடிப்படைத் தேவைகளும் தென்காசியின் கோரிக்கைப் பட்டியலில் இணைந்துள்ளன. விவசாயம், அதைச் சார்ந்த தொழில்கள் நடைபெற்று வந்தாலும் தொழிற்சாலைகளோ, புதிய தொழில் வாய்ப்புகளோ இல்லாதது பெரும் குறையாகத் தொடர்கிறது.

மாவட்டத்தில் இருக்கும் ஐந்து தொகுதிகளில் ஆலங்குளத்தில் திமுகவும், கடையநல்லூரில் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றுள்ளன. மற்ற மூன்று தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன. சங்கரன்கோவில் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. ஆலங்குளம் திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடையநல்லூரில் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிகம் என்பதால் திமுக கூட்டணிக்கு அங்கு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

தென்காசி தொகுதியில் போன முறை குறைந்த வாக்குகளிலேயே காங்கிரஸ் வெற்றியை பறிகொடுத்ததால், இந்த முறை வெற்றிக்கான முனைப்பில் 'டஃப்' கொடுக்கும். சரிசமமான சாதக, பாதக வாய்ப்புகளுடன் அதிமுகவும், திமுகவும் தென்காசியில் தேர்தலைச் சந்திக்கின்றன. தங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதால், தென்காசி மக்கள் அதிமுகவை ஆதரிப்பார்களாக என்பது தேர்தலில் தெரியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.