பெற்றோரை கவனிக்க முடியாது என்றால் அவர்கள் வழங்கிய சொத்து செல்லாது...தென்காசி கோட்டாட்சியர் உத்தரவை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Sep 21, 2022, 12:55 PM IST

Etv Bharat

பெற்றோரை கவனிக்க முடியாது என்றால் அவர்கள் வழங்கிய சொத்து செல்லாது என தென்காசி கோட்டாட்சியர் உத்தரவை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.

தென்காசி: ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சீதாராம்(85) மற்றும் சண்முக வடிவு (78). இத்தம்பதிக்கு 4 மகன்கள் இருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்து விட்டார். ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் இது வரை வீடு திரும்பவில்லை. உயிரிழந்த மகனுக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு தனது மகன்கள் கடல்மணிராஜா மற்றும் செல்லப்பாண்டி ஆகியோருக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்தனர். தனது விவசாயம் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து இறந்து போன தனது மகனின் 7 குழந்தைகளுக்காக செலவு செய்து வந்துள்ளனர்.

15 கோடி ரூபாய் அளவுக்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருக்கும் கடல்மணிராஜா என்ற மகனுக்கு முதியவரின் இந்த செயல் பிடிக்காததால் 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குளத்தில் இருந்து பெற்றோரை வந்து சந்திப்பதையும் அவர்களைப் பராமரிப்பதையும் விட்டு விட்டார். மற்றொரு மகன் செல்லப்பாண்டி தொழில் நிமித்தமாக பாளையங்கோட்டையில் வசிப்பதால் அவரும் பெற்றோரை கவனிக்கவில்லை.

இதனால் முதியவர் சீதாராம், தனது மனைவி மற்றும் இறந்து போன மகனின் 7 குழந்தைகள் ஆகியோரைப் பாரமரிக்க மிகவும் சிரமப்பட்டார். சொத்துக்களை எழுதி வைத்த தனது இரு மகன்களையும் உதவிக்கு அழைத்தும் அவர்கள் வரவில்லை. இதனால், தான் எழுதிக் கொடுத்த சொத்துக்களை தனக்குத் திரும்ப அளிக்குமாறு கோரியும் அவர்கள் கொடுக்கவில்லை.

தென்காசி

இதனால் கடந்த ஆண்டு தனது சொத்துக்களை மீட்டுத் தருமாறு தென்காசி கோட்டாட்சியருக்கு புகார் மனு அனுப்பினார். மனுவை விசாரித்த கோட்டாட்சியர் கங்காதேவியிடம் இரு மகன்களும் பெற்றோரை பராமரிக்க இயலாது என கூறியதன் பலனாக இருவருக்கும் முதியவர் எழுதிக் கொடுத்த ஆவணங்கள் செல்லாது என உத்தரவிட்டார்.

அவரது மூத்த மகன் கடல்மணிராஜா கோடீஸ்வரராக உள்ள நிலையிலும் இந்த உத்தரவுக்கு எதிராக தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்தார். அதன் மீது தீவிர விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கோட்டாட்சியர் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து தள்ளாத வயதில் உள்ள சீதாராம் சண்முக வடிவு தம்பதிக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மீண்டும் அவர்கள் வசமானது. எஞ்சியிருக்கும் தங்கள் காலத்தை 7 பேரக்குழந்தைகளுக்காக செலவிடப் போவதாகவும், தங்கள் சொத்துக்களை மீட்டுக் கொடுத்த ஆட்சியருக்கு நெஞ்சார்ந்த நன்றி எனவும் உருக்கமாக தெரிவித்தார் முதியவர் சீதாராம்.

பெற்றோரின் உழைப்பில் உருவான சொத்துக்களை வைத்துக் கொண்டு வயதான காலத்தில் அவர்களை பராமரிக்காமல் விட்டு ஒதுங்கிக் கொள்ளும் பிள்ளைகளுக்கு இது ஒரு நல்ல படிப்பினையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாநில கல்விக்கொள்கையில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை; ஓய்வுபெற்ற நீதிபதி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.