தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் ஆகியவை மூடக்கப்பட்டுள்ளன. இதேபோன்று மதுக்கடைகளிலும் அதிகமான கூட்டம் காணப்பட்ட நிலையில் அரசு மதுபான கடைகள், தனியார் மதுபான கடைகள் என அனைத்தும் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படும் என அரசு உத்தரவிட்டது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சிலர் மது பிரியர்களுக்கு அதிக விலைக்கு மது விற்பனை செய்ய அதிகளவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். தற்போது மதுக்கடைகள் செயல்படாத நிலையில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் தேவர்குளம் வன்னிகோனந்தல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தேவர்குளம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதனைத தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை பிரிவு காவல்துறையினர், அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தேவர்குளத்தைச் சேர்ந்த செல்லையா,(57) குமார் (40) சந்திரன் (35) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர், அவர்களிடமிருந்து ரூ.32 ஆயிரத்து 950 ரொக்கம், 950 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த வன்னிக்கோனந்தலையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரையும் கைது செய்த தேவர்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் சிறையிலடைத்தனர்.