ETV Bharat / state

களைகட்டிய பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை.. தீபாவளியை முன்னிட்டு ஆடு வாங்க குவிந்த மக்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 9:31 AM IST

Pavoorchatram goat market
தீபாவளியை முன்னிட்டு ஆடு வாங்க குவிந்த வியாபாரிகள்

Pavoorchatram goat market: தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி ஆடுகளை வாங்குவதற்காக பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.

தீபாவளியை முன்னிட்டு ஆடு வாங்க குவிந்த வியாபாரிகள்...

தென்காசி: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது வருகிற நவம்பர் 12ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஆனால், பொதுமக்கள் தற்போது முதலே தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, ஏராளமான பொதுமக்கள் தற்போது முதலே புத்தாடைகள் மற்றும் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தீபாவளி தினத்தன்று அசைவ உணவுகளை சமைப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கி சமைப்பர். அதற்காக வியாபாரிகள் தீபாவளி பண்டிகை வியாபாரத்தை முன்னோக்கி ஆடு, கோழிகளை வாங்கி ஏராளமாக வளர்த்து வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டத்திலுள்ள பிரபல ஆட்டுச் சந்தைகளில் ஒன்றான பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் இன்று கூட்டம் களைகட்டியுள்ளது.

அதாவது, பாவூர்சத்திரத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் தாங்களாகவே ஆடு மற்றும் கோழிகளை வளர்ப்பர். பின் அந்த வளர்ப்பு ஆடு, கோழிகள் முக்கியமான நாட்களில் விற்பனைக்கு கொண்டு வந்து, சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். அதுமட்டுமின்றி, இங்கு ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை அன்றும் ஆட்டுச் சந்தை நடைபெறும்.

இந்த நிலையில், தீபாவளி வருவதை முன்னிட்டு ஆடுகள் விற்பனை இன்று காலை முதலே களைகட்டியது. இந்த சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. மேலும், தீபாவளி தினத்திற்கு முன்னதாகவே களைகட்டத் துவங்கிய ஆட்டுச் சந்தையில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள ஏராளமான வியாபாரிகள் வந்து விற்பனைக்காக உள்ள ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

இந்த சந்தையில், ரூ.4 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஆடுகள் விலை போன நிலையில், ஆட்டுச் சந்தையில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், நூற்றுக்கணக்கான ஆடுகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதால், இன்று மட்டும் ரூ.50 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனையானது நடைபெற்று இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் திருப்பதி லட்டு, லுங்கிக்கு கெடுபிடி.. சுங்கத்துறையினரின் கட்டுப்பாடுகளால் பயணிகள் அதிருப்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.